கடலோரங்களில் மழை... நீலகிரியில் தரைப்பனி - வானிலை எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் டிசம்பர் 25,26 ஆகிய இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மார்கழியில் குளிர் அதிகரித்து விட்டது... சில பகுதிகளில் பனி பெய்கிறது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் வானம் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது. சூரியனே தென்படவில்லை.
இதற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே இதற்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி, பாலச்சந்திரன் ''குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் டிசம்பர் 25,26 ஆகிய இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
மேக மூட்டம்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
தரைப்பனி
உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த இரண்டு இரவுகளுக்கு நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் தரைப்பனி படர்ந்து காணப்படும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழைப்பொழிவு இல்லை. அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது பற்றி இரண்டு நாட்களுக்கு பிறகே தெரியவரும் என்று கூறியுள்ளார் பாலச்சந்திரன்.