வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்.. தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு!
வடமேற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: வடமேற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் நேற்றும் பலத்த மழை பெய்தது.
அதிகபட்சம் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 70 மி.மீ, வால்பாறையில் 50 மி.மீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 40 மி.மீ மழை பதிவானது. இதனால் வால்பாறையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவிரமடைந்தது
கடந்த வாரம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பருவமழை மேலும் தீவிரம் அடைந்தது. கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கியது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அதன் தாக்கத்தால் தமிழக மலைப்பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததையடுத்து மழைப்பொழிவும் குறைந்தது.
வடமேற்கு திசை
இந்த நிலையில், வடமேற்கு வங்க கடலில் நேற்று மீண்டும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியும் இதே வடமேற்கு திசையில் தான் நிலைகொண்டிருந்தது.
மீண்டும் மழைக்கு வாய்ப்பு
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் கேரளா மற்றும் கர்நாடகாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நகர்வை பொறுத்தே
ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாளில் இதன் நகர்வை பொறுத்தே அடுத்தக்கட்ட தகவல் தெரியவரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகம் புதுச்சேரியில்
இதற்கிடையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.