புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.... மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மீனவர்கள் டிசம்பர் 5ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை : தெற்கு அந்தமானில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தெற்கு அந்தமானில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமானில் நிலவி வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிக்கு நகரக்கூடும் என்றும் , டிசம்பர் 5ம் தேதி வரை மீனவர்கள் தெற்கு ஆந்திரா மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூரில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பதிவாகி உள்ளது. மேலும் 13 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.