ராம்குமார் பிரேத பரிசோதனை குறித்து உயர்நீதிமன்றத்தில் புதிய மனு!
சென்னை: ராம்குமார் பிரேத பரிசோதனை குறித்து அவரது தந்தை சார்பில் புதிய மனு ஒன்றை இன்று வழக்கறிஞர் சங்கர சுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனால் ராம்குமாரின் பிரேத பரிசோதனை தாமதமாகி வருகிறது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரின் தற்கொலை மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருவதால் அவரது தந்தை சார்பில் பிரேத பரிசோதனை குறித்து புதிய மனு ஒன்றை வழக்கறிஞர் சங்கர சுப்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், பிரேத பரிசோதனையின் போது, தங்களது மருத்துவர் சம்பத் இருக்க வேண்டும் என்றும், தடயவியல் நிபுணர் ஒருவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்குத்தான் விசாரணைக்கு வர உள்ளது. எனவே, அதன் பிறகுதான் ராம்குமார் பிரேத பரிசோதனை எப்போது நடக்கும் என்ற விவரம் தெரிய வரும். இதனால் இன்று காலை தொடங்க இருந்த ராம்குமார் பிரேத பரிசோதனை தாமதமாகி வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்த பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுவாதியின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரே ஒருவர் ராம்குமார்தான். அவரை எவ்வளவு பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். திடீரென ஏற்பட்டுள்ள அவரது மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தங்களது மருத்துவரான சம்பத் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய மரணங்களின் பிரேத பரிசோதனையின் போது தடயவியல் நிபுணர் ஒருவர் கண்டிப்பாய் உடன் இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தடயவியல் நிபுணர் ஒருவரும் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.