என்னப்பா சோதனை.... சப்ப மேட்டருக்கெல்லாம் ”தர்மயுத்த”த்துக்கு சங்கு ஊதுவாங்களா?
தமிழகம் இன்னொரு தர்மயுத்தத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவதற்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது.. அடுத்து நள்ளிரவு தியானம்.. ஆன்மா உந்துதல் எல்லாம் அரங்கேற்ப போவதாக பரபரப்புகள் பதற வைத்துக் கொண்டிருக்கின்றன.
தர்மயுத்தம் பார்ட் -2 வெடிப்பதற்கான அப்படியென்ன அதீதமான காரணங்கள் என அலசலில் இறங்கினோம்.. அடேங்கப்பா இதுக்கு எல்லாமா தர்மயுத்த சங்கு ஊதுவாங்க என மலைக்க வைத்துவிட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்..
டைவர்ஸ் ரத்து செய்துவிட்டு எல்லோரும் சேர்ந்தபோது, சைரன் கார் கனவில் மிதந்தவர் எம்.பி. ஆனால் என்னதான் முக்கி முக்கி லாபி செய்தாலும் அங்கிருந்து மூக்கு உடைபட்டு திரும்புனதான் மிச்சம்.
ஏனெனில் அரண்மை அரசியலில் கோலோச்சுகிற அவருக்கு கட்சி பதவி கனவிலும் கிடைக்காது என்பது தெரியும். சரி ஆட்சி இருக்கிற வரை அகப்பட்டதை எடுப்போம் என வேலைகளில் விறுவிறுவென இறங்கினார்.
சென்னைக்கும் திருச்சிக்கும் நட்ட நடு சென்டரில் தமது ஆதரவாளர் ஒருவருக்கு ஒப்பந்தம் கிடைக்க நள்ளிரவு உளறல் மந்திரியிடம் பேசியிருக்கிறார். அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.
அதேநேரத்தில் தலைமை மந்திரி முதல் இந்த அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் வல்லமை கொண்டவரும் தலைமைக்கு மேலே கத்தியை வைத்திருப்பவரும் தமக்கு நெருக்கமான ஒருவருக்கு பரிந்துரைத்திருக்கிறார். இதென்ன புது வம்பா இருக்கேன்னு கோட்டை கேப்டனிடம் பஞ்சாயத்து போயுள்ளது.
கத்தியை தலை(மை)க்கு மேலே வைத்திருப்பவருடன் முதலில் பேசிப் பார்த்தார்கள்....அவர் விருட்டென வெளியேறிப் போய்விட்டார்.. போன வேகத்தைப் பார்த்து அந்த முகாமுக்கு போய்விடுவாரோ என கோட்டையாருக்கு பீதி கிளம்ப வேறுவழியில்லாமல் அவரது ஆதரவாளருக்கே ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது.
இந்த தகவல் கிடைத்ததும் தாம் தூம் என எம்.பியானவர் எகிறி குதித்திருக்கிறார்.. இதனையடுத்துதான் தர்மயுத்தம் பார்ட் -2 க்கு சங்கு ஊதும் விதமாக சலம்பலை காட்டி வருகிறாராம்.
ஏப்பு சப்ப மேட்டருக்கெல்லாம் தர்ம யுத்த சங்கு ஊதுனா நாடு தாங்குமா சாமீ?