வண்டலூர் உயிரியில் பூங்காவுக்கு வருவோரின் நலனுக்காக.. புது ரயில் நிலையம்!
சென்னை: சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியில் பூங்காவுக்கு வருகை தருவோரின் வசதிக்காக பூங்காவுக்கு எதிரிலேயே புதிய ரயில் நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள் ரயில் நிலையம் அமைக்கத் தேவையான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
ஆசியாவிலேயே மிகப் பெரியதும், அதிக விஸ்தீரமானதுமான உயிரியல் பூங்கா வண்டலூர் பூங்காதான். இங்கு சிங்கம், புலி, சிறுத்தை முதல் சாதாரண பறவை வரை பல வகையான விலங்குகள் அடைக்கப்பட்டுள்ளன.
தினசரி உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த பூங்காவுக்கு வருகை தருகின்றனர். இந்தப் பூங்காவுக்கு ரயிலில் வருவோர் தாம்பரம் வந்து பின்னர் அங்கிருந்து வண்டலூர் ரயில் நிலையம் வர வேண்டும். அதன் பின்னர் சுமார் 2 கிலோமீ்ட்டர் தொலைவுக்கு நடந்து பூங்காவுக்குள் போக வேண்டும்.
பூங்கா பெரிது என்பதால் அங்கும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் ரயில் நிலையத்த அடைவதற்குள் கால், கை எல்லாம் விட்டுப் போய் விடும். எனவே வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் உள்ள ஓட்டேரியில் புதிதாக ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதற்காக செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம், தாசில்தார் பஷீரா ஆகியோர் ஓட்டேரி ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள ஒரு ஏக்கர் 20 சென்ட் இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர். இதில் பிளாட்பாரம், டிக்கெட் கவுன்ட்டர், நடை மேம்பாலம், கழிப்பறை உள்ளிட்ட பல அதி நவீன வசதிகள் இடம் பெறும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த இடத்தில் புதிய ரயில்வே நிலையம் அமைக்கும் பணி தொடங்கும் என்று தெரிகிறது.