ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை: நிர்வாக வசதிக்காக ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே உள்ள சந்தை மைதானத்தில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி எம்ஜிஆர் திருவுருவப்படத்தை திறந்துவைத்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து 113 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார். 112 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கி முதல்வர் பேசினார். அப்போது, நிர்வாக வசதிக்காக ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
போளூர், செங்கம், கலசப்பாக்கம் கிராமங்களை இணைத்து ஜமுனாமரத்தூரை புதிய வட்டமாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் செண்பகத்தோப்பு அணை மதகுகள் ரூ.9.80 கோடி செலவில் சீரமைக்கப்படும் எனவும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.