'கொஞ்சம் காமம்; நிறைய காசு!' - பாலியல் கூடங்களாகும் பல்கலைக்கழகங்கள் 'அந்த' பி.எச்டி மாணவி!
Recommended Video
சென்னை: ' பிரிட்டன் கல்விமுறையை இந்தியாவும் பின்பற்றத் தொடங்கியது. தற்போது பிரிட்டன் கல்விமுறை முற்றிலும் மாறிவிட்டது. ஆனால், இந்தியாவில் இன்னமும் மாற்றப்படவில்லை.
அமெரிக்காவில் ஒவ்வொரு கல்லூரியும் தன்னாட்சி பெற்றவை. ஒவ்வொன்றும் பல்கலைக்கழகங்களாகச் செயல்படுகின்றன. இங்குதான் ஒரு பல்கலைக்கழகத்தின்கீழ் 250 கல்லூரிகள் இயங்குகின்றன.
இதனால், இரண்டு லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல் எனப் பல்வேறு பணிகளை ஒரே பல்கலைக்கழகம் செய்ய வேண்டியுள்ளது. பி.எச்டி அல்லது செட்/நெட் தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலைக்கும் எம்.பில் படித்தவர்கள் இளநிலை படிப்புகளுக்கும் ஆசிரியராக முடியும்.
ஆனால், செட்/நெட் தேர்வு எழுதுவோரின் தேர்ச்சி விகிதம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே. பி.எச்டி படிப்பவர்களின் எண்ணிக்கை இங்கு மிகவும் குறைவு'
- பேராசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பான இந்தக் கேள்விக்குப் பதில் கொடுத்தவர், அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராமச்சந்திரன்.
அதேகாலகட்டத்தில்தான் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வாசித்தார் பி.எச்டி மாணவி ஒருவர்.
சென்னை பல்கலை.
தமிழகப் பல்கலைக்கழகங்களின் தாய்ப் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம். இங்கு துணைவேந்தராக வருவதற்குப் பெரும் போட்டி நிலவுகிறது. அப்படியே பதவிக்கு வந்துவிட்டாலும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சிண்டிகேட் உறுப்பினர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகள், பேராசிரியர்களின் கட்சிப்பாகுபாடு, ஆளுநர் மாளிகை தலையீடு, உயர்கல்வித்துறை அமைச்சகத்தின் அத்துமீறல் என அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் ஒருவர் துணைவேந்தராகப் பதவியில் நீடிக்க முடியும். இதில் சிறு பிசிறு தட்டினாலும் நினைத்துப் பார்க்கவே முடியாத அவதூறுகளை எதிர்கொள்ள நேரிடும்.
இதன் காரணமாகவே, பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்களைக் கிடப்பில் போடுவது வழக்கமாக இருந்து வருகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு என பல கேம்பஸ்கள் செயல்படுகின்றன. மெரினா கேம்பஸ், உலகப் பல்கலைக்கழக சேவை மையம், தரமணியில் உள்ள ஆய்வு மையம் ஆகியவை இதில் அடக்கம். தரமணி ஆய்வு மையத்தின் மீது மாணவி ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
தரமணி பஞ்சாயத்து
தரமணியில் உள்ள மைக்ரோ பயாலஜி துறையின் பேராசிரியர் மீதுதான், அந்த மாணவி குற்றச்சாட்டு வாசித்தார். இவரிடம் பி.எச்டி படிப்புக்காக ஜனவரி மாத தொடக்கத்தில் அணுகியிருக்கிறார் அந்த மாணவி. ஒல்லியான தேகம், எடுப்பான நிறம் என மாணவியின் அழகில் கிறங்கிய பேராசிரியர், ' பி.எச்டியை முடித்துக் கொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. தீசிஸ் சப்மிட் செய்வது முதல் எக்ஸ்டர்னல் வரையில் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்' என நம்பிக்கையூட்டியவர், ' வளசரவாக்கத்தில் அரண்மனை மாதிரி வீடு கட்டி வச்சிருக்கேன். பொங்கல் பண்டிகையைக் குடும்பத்தோடு கொண்டாட இருக்கிறோம். அன்னைக்கு என்னுடைய மாணவர்களும் வருவார்கள். மறக்காமல் வந்துவிடு' என அட்ரஸைக் குறித்துக் கொடுத்திருக்கிறார். பொங்கல் பொங்குவதை ரசிக்கச் சென்ற மாணவிக்கு, பேராசிரியர் வழிந்து பொங்குவதைக் காண சகிக்கவில்லை. ' அந்த வீட்டின் முதல் மாடியில் பேராசிரியர் தனியாக தங்கியிருக்கிறார்' என்ற உண்மையே அங்கு சென்ற பிறகுதான் மாணவிக்குத் தெரிய வந்தது.
' எல்லா பக்கமும் இது சாதாரணமாக நடப்பதுதான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டா...நோ ப்ராப்ளம். எத்தனையோ கேர்ள்ஸ்க்கு பி.எச்டியை முடிச்சுக் கொடுத்திருக்கேன்' என எந்தவிதப் படபடப்பும் இல்லாமல் பேசியிருக்கிறார் பேராசிரியர். ' ஸாரி சார்...நீங்க நினைக்கற மாதிரி ஆள் நான் இல்லை. ரொம்ப கவுரவமான குடும்பம். பி.எச்டி முடிச்சா லெக்சரர் ஆகலாம்கிற ஆசையில்தான் வந்தேன்' என மிகுந்த பயத்துடன் விளக்கியிருக்கிறார். இதையும் மீறி அத்துமீற முயற்சி செய்திருக்கிறார் அந்த பேராசிரியர்.
மண்ணை வாரி தூற்றிய மாணவி
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த மாணவி, பெரம்பூரில் உள்ள தன்னுடைய நண்பரை உதவிக்கு அழைத்திருக்கிறார். அவரிடம் நடந்த விஷயங்களை விலாவாரியாகத்தான் தெரிவித்திருக்கிறார். அவர்கள் இருவரும் நேராகப் பல்கலைக்கழக பதிவாளரிடம் விஷயத்தைக் கொண்டு சென்றுள்ளனர். அந்தப் புகாரை குறைதீர்ப்பு பிரிவுக்கு அனுப்பிவிட்டு ஒதுங்கிக் கொண்டார் பதிவாளர். அந்தப் பிரிவின் பெண் அதிகாரிகள் நடந்து கொண்டவிதம்தான் உச்சகட்ட கொடூரம். ' நீ புகார் கொடுத்திருப்பது பேராசிரியர் ஒருவர் மீது. இதன்பேரில் நாங்கள் விசாரணை நடத்தினால் பாதிப்பு உனக்குத்தான். உன்னுடைய பெயர் ஒரேயடியாக கெட்டுப் போய்விடும். நடந்த விவகாரங்களை ஒன்றுவிடாமல் ஆண் அதிகாரிகளிடம் நீ விளக்க வேண்டியது வரும். இப்படியே வெளியே போய்விட்டால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை' எனக் கூறியுள்ளனர்.
இதன்பின்னர் மாணவியால் பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படலாம் எனக் கருதி, பேராசிரியரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர் குறைதீர்ப்புக் குழுவினர். விசாரணைக்கு வந்த பேராசிரியரோ, ' அந்த மாணவிக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளது. வளசரவாக்கத்தில் என்னுடைய வீட்டை சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளேன். இதை அறிந்து கொண்டுதான் மாணவி அங்கு வந்தார். அவருக்கு நான் எந்தத் தொந்தரவும் அளிக்கவில்லை' எனக் கூறிய வார்த்தைகளை குறைதீர்ப்புப் பிரிவு முழு மனதோடு ஏற்றுக் கொண்டது. இதே பேராசிரியர் மீது வேறொரு மாணவியும் சில்மிஷ புகாரைக் கூறியிருக்கிறார். ' நீ சொன்ன புகாருக்கு என்ன ஆதாரம் இருக்கு?' என அவரையும் வெளியே துரத்திவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம். ' சில்மிஷ காரியத்தில் ஈடுபட்டதற்கெல்லாம் ஆதாரத்தையா சேகரித்து வைக்க முடியும்?' என மண்ணை வாரித் தூற்றியிருக்கிறார் அந்த மாணவி.
அரசியல் ப்ளஸ் சங்கம்
போலீஸில் புகார் கொடுத்தால் வழக்கு, நீதிமன்றம் என அலைந்து வாழ்க்கையையே தொலைக்க வேண்டிய நிலை இருப்பதால்தான், பல பேராசிரியர்கள் அத்துமீறுகின்றனர். பி.எச்டி படிப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது எனக் கவலைப்படும் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் போர்வையில் மறைந்திருக்கும் கயவர்களைத் தண்டிப்பதற்கு தயக்கம் காட்டுவதற்கு ஒரே காரணம். அந்தப் பேராசிரியர்களின் அரசியல் பிளஸ் சங்க நடவடிக்கைகள்தான்.
இதே வரிசையில் அத்துமீறிய ஒரு பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ' மொழி' வகுப்புகளை கவனித்து வந்தார். தன்னை ஒரு போராளி எனக் காட்டிக் கொள்வதற்கும் தயங்காதவர்.
அவரைப் பற்றி பார்ப்போமா...?