இப்படித்தான் மாணவிகளுக்கு வலைகள் விரிக்கப்படும்- கொஞ்சம் காமம்; நிறைய காசு!' (3)
Recommended Video
'பி.எச்டி படிப்பை மூன்றாண்டுகளுக்குள் முடித்துவிட வேண்டும் என்பதை எந்த துணைவேந்தரும் கட்டாயமாக்குவதில்லை. பிரச்னை இங்குதான் தொடங்குகிறது. ஆய்வு மாணவியை தங்கள் வலைக்குள் இழுக்க வைக்கும்விதமாக, ஆராய்ச்சிப் படிப்பை நான்கு, ஐந்தாண்டுகள் இழுத்துவிடும் வேலையைச் செய்கின்றனர் பேராசிரியர்கள். ஆராய்ச்சிப் படிப்புகளைப் பொறுத்தவரையில் அரசின் நிதி உதவி என்பது மூன்றாண்டுகளுக்கு மட்டும்தான்.
அதற்கு அடுத்துவரும் மாதங்களில் மாணவர்களே தங்களுக்கான செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் நொந்து போகும் மாணவிகளில் சிலர், வேறு வழியில்லாமல் பேராசிரியரின் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றனர்' - மூத்த கல்வியாளர் ஒருவரின் ஆதங்கம் இது.
மூன்று சிக்கல்கள்!
பி.எச்டி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மூன்று விதங்களில் சிக்கல்கள் வருகின்றன. படிப்பைத் தொடங்கும் காலகட்டத்தில் 'கோர்ஸ் வொர்க் பேப்பர்' (Course work paper) ஒன்றைத் தயார் செய்ய வேண்டும்.
இதற்கு சம்பந்தப்பட்ட கைடின் (பேராசிரியர்) உதவி வேண்டும். அவர் நினைத்தால் ஆய்வு படிப்பின் அடுத்தகட்டத்துக்குள் நுழைய முடியும். அடுத்ததாக, ஆய்வின் விவரங்களை குறிப்பிட்ட காலகட்டங்களில் டாக்டோரல் கமிட்டி முன் தெரிவிக்க வேண்டும்.
இதற்காக வரும் எக்ஸாமினர்கள் பலரும் சம்பந்தப்பட்ட கைடுக்கு மிகவும் வேண்டியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வேண்டிய உதவிகளை சம்பந்தப்பட்ட மாணவிகள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக, வைவா எனப்படும் ஆராய்ச்சிப் படிப்பின் இறுதியில் நடத்தப்படும் மீட்டிங். பாலியல் விவகாரத்தில் வைவா முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக, பி.எச்டி படிப்பில் மதிப்பெண் முறைகள் பின்பற்றப்படுவதில்லை. கமாண்டட் (commanded), ரிஜெக்டட்(Rejected) என இரண்டே பிரிவுகள்தான். தங்களுக்கு அனைத்து வகைகளிலும் சரிப்பட்டு வரும் மாணவிகளுக்கு 'ஹைலி கமாண்டட்(Highly commanded)' எனக் குறிப்பெழுதுகின்றனர்.
இந்த மூன்று விஷயங்களில் இருந்து தப்பித்து, பட்டம் பெறுவது என்பது சாதாரணப்பட்டதல்ல. இந்த மூன்று வகைகளுக்குள் மாணவிகளைத் திணிப்பதில் பல நேரங்களில் பேராசிரியர்கள் வெற்றி பெறுகின்றனர். சில நேரங்களில் புகார்களுக்கு ஆளாகி அவமானப்படுகின்றனர்.
அப்படித்தான் அந்தப் போராளி பேராசிரியரும் வந்தார்.
சென்னை பேராசிரியர் லீலை
சென்னையின் கடற்கரைச் சாலை ஓரத்தில்தான் அவருடைய வீடு இருக்கிறது. இன்றளவும் மொழியை வளர்த்தெடுப்பதற்கான பொருட்களை தயாரித்துக் கொண்டு, அரசுத் தரப்பிடம் அவர் பேரம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர் பணியில் இருந்த காலகட்டங்களில் சர்ச்சையில் அடிபடாத நாட்கள் மிகவும் குறைவு. அவருடைய துறையிலேயே, சக பேராசிரியர்களோடு முறைத்துக் கொண்டுதான் இருப்பார். அவர்களும், ' இவர் என்ன செய்கிறார்?' என நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார்கள். மாணவர்களில் தனக்கு சாதகமான சிலரைத் தயார் செய்து வைத்திருப்பார். துணைவேந்தர் தனக்கு எதிராகத் திரும்புகிறார் என்றால், மாணவர்களைப் போராடத் தூண்டிவிடுவார்.
' நான் போராட்டக் குழுக்களில் இருந்தவன். பலமுறை கைதானவன். மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க மாவோயிஸம்தான் சரியான தீர்வு' என நரம்பு புடைக்க அவர் கூறும் வார்த்தைகளைக் கேட்டு மாணவர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடும். இதெல்லாம் சில காலகட்டங்கள் வரையில் நன்றாகச் சென்று கொண்டிருந்தன. இந்த பேராசிரியரின் உள்ளத்தை சில மாணவர்கள் புரிந்து கொண்டார்கள்.
தொழிலில் மாணவர்கள்
' வகுப்பறையிலேயே மாணவிகளிடம் வழிந்து கொண்டிருக்கிறார். ஐந்து மணிக்கு மேல் ஸ்பெஷல் கிளாஸ் எனக்கூறி சில மாணவிகளை மட்டும் தனது அறையில் அமர வைத்துக் கொள்கிறார். அவருடைய பிடியில் இருந்து சிலரால் தப்ப முடியவில்லை. துணைவேந்தரையே மிரட்டிக் கொண்டிருப்பதால் அவருடைய செயல்களை யாராலும் தடுக்க முடியவில்லை' என வரிந்து கட்டிக் கொண்டு கொதித்தார் மாணவர் பேரவை நிர்வாகி ஒருவர். அவரையும் சமாதானப்படுத்த பெரும்பாடுபட்டார் அந்தப் பேராசிரியர். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆராய்ச்சி மாணவர் ஒருவர், " மொழி வளர்ச்சி என்ற பெயரில் புதிது புதிதாக பொருள்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஆராய்ச்சிப் படிப்புக்கு வரும் மாணவர்களை அவருடைய தொழிலுக்கு முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறார். வீட்டைச் சுத்தம் செய்வது முதல் மென்பொருள் வியாபாரம் வரையில் மாணவர்களைக் கசக்கி பிழிந்துவிடுவார். ஒவ்வொரு பொருளும் பல லட்சங்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. மாணவிகளுக்கு அந்த சிரமத்தை அவர் கொடுப்பதில்லை. வகுப்பு முடிந்த பிறகும், அவருக்கு வேண்டிய மாணவிகள் மட்டுமே அவருடைய அறையில் அமர்ந்திருக்க முடியும்.
மல்லுக்கட்டினால் விருந்து
மாணவிகளில் பலர் எங்களிடம் கதறி அழுதார்கள். 'எனக்கென்று யாரும் இல்லை. என் பிசினஸில் நீங்களும் சம்பாதிக்க முடியும். உங்கள் வருமானத்தைப் பெருக்குவது என் வேலை. பி.எச்டியைப் பற்றிய கவலையை விட்டுவிடுங்கள்' என சிரித்த முகத்தோடு பேசுகிறார். சில நேரங்களில் அவருடைய அத்துமீறலைத் தடுக்க முடியவில்லை' என வேதனைப்பட்டனர். இதனைக் கேட்டு ஆத்திரப்பட்டு பேராசிரியரிடம் சண்டைக்குப் போனபோது, ' அந்த மாணவிக்கு எந்தவித தகுதிகளும் இல்லை. நீங்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு' எனக் கூறிவிட்டு, செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டார். இதையும் மீறி பேசியவர்களுக்கு நல்ல ஓட்டலில் சரக்கு விருந்தையும் பரிமாறினார். போராளி குணத்தோடு பல மைனஸ்கள் இருப்பதை, யாருக்கும் தெரியாமல் மறைப்பதில் கில்லாடியாக இருந்தார் அந்தப் பேராசிரியர். ஓரிரு வருடங்களுக்கு முன்பு, அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், 'ஆராய்ச்சிப் படிப்புக்கு உதவுகிறேன்' என இன்னமும் வலைவிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்" என்றார் ஆதங்கத்துடன்.
மாணவர்களை தூண்டிவிடுகிறார்
மொழி பேராசிரியர் மீது துணைவேந்தர் நடவடிக்கை பாயும்போதெல்லாம், பல்கலைக்கழக வாசலில் பதாகைகளோடு மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றன. காலம்கடந்த பின்னர்தான், தங்களுடைய வீணான போராட்டங்களை அந்த மாணவர்கள் எண்ணிப் பார்த்துள்ளனர். இதன் பயனாக, எந்தவித நடவடிக்கைக்கும் ஆளாகாமல் தொழிலில் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்தப் பேராசிரியர்.
இதே துறையில் பணியாற்றும் கோவை பேராசிரியர் ஒருவர், ஆராய்ச்சிப் படிப்புக்காக தன்னைத் தேடி வந்த மாணவியிடம் நடந்து கொண்டவிதம் உச்சகட்ட கொடூரம். அந்த விவகாரத்தை அடுத்துப் பார்ப்போம்.
(தொடரும்)