மாணவிகளை அலறவைக்கும் அந்த 'ரிசர்ச் டிஸ்கஷன்'- கொஞ்சம் காமம்; நிறைய காசு!' (4)
Recommended Video
சென்னை: கோவை மாவட்டம், சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த மாணவி. காவல்துறை எஸ்.பி அலுவலகத்தில் பேராசிரியர் ஒருவர் மீது இவர் கொடுத்த புகார், பாரதியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.
விபத்து ஒன்றில் கணவரை இழந்து தவித்த அந்த மாணவி, பி.எச்டி படிப்பின் மூலம் விரிவுரையாளர் ஆகும் கனவோடுதான் பல்கலைக்கழக மொழித்துறையில் சேர்ந்தார். அங்கு நடந்த கொடுமைகளை தன்னுடைய மனுவில் இவ்வாறாக விவரித்திருந்தார்.
' பாரதியார் பல்கலைக்கழகத்தில் முழுநேர மொழிப் பாட பி.எச்டி வகுப்பில் சேர்ந்தேன். எதிர்பாராதவிதமாக என்னுடைய கணவர் இறந்துவிட்டார். ஒரே ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வருகிறேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் படிப்பைத் தொடர முடியவில்லை. இதன் விளைவாக என்னுடைய பி.எச்டி பதிவு ரத்தாகிவிட்டது. மீண்டும் படிப்பதற்காக விண்ணப்பித்தேன்.
பேரம் பேசிய பேராசிரியர்
என்னிடம் பேசிய துறை பேராசிரியர், ' நம்ம இரண்டு பேருக்கும் ஒரே ஏரியாதான். நீ படக் கூடிய கஷ்டங்களை நானும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். பி.எச்டி படிப்பை எந்தவிதச் சிரமமும் இல்லாமல் முடிக்க வேண்டும் என்றால், ஒன்றரை லட்ச ரூபாய் செலவாகும். நீ அந்தளவுக்குப் பணம் தர வேண்டாம். நான் கூப்பிடும்போது என் வீட்டுக்கு வந்தால் போதும். இதற்கு நீ சம்மதிக்காமல் பி.எச்டி வாங்க முடியாது' எனப் பகிரங்கமாகக் கூறிவிட்டார். ' படுக்கைக்கு வா' எனப் பகிரங்கமாக அழைப்புவிடுத்த அந்தப் பேராசிரியரைப் பற்றி, துணைவேந்தராக இருந்த ஜேம்ஸ் பிச்சையிடம் புகார் கொடுத்தேன். மொழி பேராசிரியரை அழைத்து விசாரித்தார் துணைவேந்தர்.
மிரட்டிய பேராசிரியர்
என் மீதுள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு, மீண்டும் பி.எச்டி படிக்க வாய்ப்பு கொடுத்தார். ஆனாலும், துறைத் தலைவர் என்னைத் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். வைவா அறிக்கையில் கையெழுத்து போட மறுக்கிறார். ' என்னை அனுசரித்துச் செல்லாமல் உன்னால் படிக்க முடியாது' என நேரடியாக மிரட்டுகிறார். அவருடைய செயல்பாடுகளின் பின்னணியில் பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலரும் இருக்கின்றனர். இப்படிப்பட்ட கேவலமான மனிதர்கள் இருந்தால், பெண்களால் எப்படிப் படிக்க முடியும்? இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மாணவி மீது புகார்
காவல்துறைக்கே புகார் மனு சென்றதை சம்பந்தப்பட்ட பேராசிரியர் எதிர்பார்க்கவில்லை. ' மூன்றாண்டு படிப்பில் சேர்ந்த மாணவி, சரியாக வகுப்புகளுக்கு வருவதில்லை. அவரது மொத்த வருகையே 116 நாள்கள்தான். மீண்டும் பி.எச்டி படிக்க விண்ணப்பித்தார். அப்போதும் அவர் முழுமையாக படிக்கவில்லை. இப்போது என்னைச் சிக்க வைக்கப் பார்க்கிறார்' எனப் பதறினார். இருப்பினும், இந்த விவகாரத்தால் பல்கலைக்கழக மானம் சீர்கெட்டுப் போனதைப் பற்றிப் பேராசிரியர்கள் யாரும் கவலைப்படவில்லை. இன்றளவும் மாணவிகள் மீதான அவரது அத்துமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படியும் வியூகம்
மாணவியால் புகாருக்கு ஆளான பேராசிரியரைப் பற்றி விசாரித்தால், ஒவ்வொரு கதைகளும் பக்கம் பக்கமாக நீள்கின்றன. " மாணவிகளை அணுகுவதில் ஒவ்வொரு பேராசிரியருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். ' இப்படியொரு மனிதரைப் பார்க்க முடியாது' எனத் தொடக்கத்தில் மெச்சப்படும் பேராசிரியர்கள், போகப்போக தங்களுடைய சுயமுகத்தைக் காட்டத் தொடங்குவார்கள். அப்படித்தான் இந்தப் பேராசிரியரும்" என விவரித்த ஆய்வு மாணவர் ஒருவர், தொடர்ந்து நம்மிடம் பேசினார்.
புத்தாக்க பயிற்சி
உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் அவர் காட்டும் பணிவைப் பார்த்தால், பவ்யசெல்வம் தோற்று ஓடிவிடுவார். நிர்மலா தேவி விவகாரத்தில் புத்தாக்கப் பயிற்சி மையத்தின் பேராசிரியர்கள் சிலர் சிக்கியுள்ளனர். இதே புத்தாக்க பயிற்சி மையத்தின் இயக்குநராகவும் இந்தப் பேராசிரியர் இருந்தார். ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயற்சி இருக்கிறதோ இல்லையோ, இதற்காக ஒதுக்கப்படும் நிதியில் வெளிமாநில சுற்றுலா பயணங்களை நன்றாக அனுபவிக்கின்றனர். அப்படிப்பட்ட பயணங்களின்போது தங்களுக்கு வேண்டப்பட்ட மாணவிகளை உடன் அழைத்துச் செல்கின்றனர். இதற்கு ரிசர்ச் டிஸ்கஷன் எனப் பெயர் வைத்துள்ளனர்.
அலறவிடும் அந்த டிஸ்கஷன்
ஆய்வு படிப்பு குறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியருடன் அடிக்கடி விவாதிக்க வேண்டும். இந்த விவாதத்தின்போது ஆசிரியரும் மாணவியும் தனியாகத்தான் இருப்பார்கள். 'இது தங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு' என நினைத்துக் கொண்டு சிலர் அத்துமீறுகின்றனர். இதற்கு உடன்படாத மாணவிகள், பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குப் புகார் கொண்டு செல்கின்றனர். அங்கும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை ' கைடு மனது வைத்தால்தான் பி.எச்டி' என்பதை சில மாணவிகள் தாமதமாகத்தான் புரிந்து கொள்கின்றனர். பல பேராசிரியர்களின் உண்மை முகம் அம்பலமாவது, இதுபோன்ற ரிசர்ச் டிஸ்கஷன் வகுப்புகளில்தான். அதற்கு முன்னதாக, மாணவிகளின் குடும்பப் பின்னணி, பொருளாதாரச் சூழ்நிலை, காதல் விவரம் என அனைத்தையும் விரல் நுனியில் அறிந்து வைத்திருப்பார்கள். ' தங்களுக்கு இந்த மாணவி சரிப்பட்டு வருவார்' என முடிவு செய்துவிட்டால், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அத்துமீறலை அரங்கேற்றுவார்கள். இதே ஸ்டைலைத்தான் புகாருக்கு ஆளான மொழித்துறை பேராசிரியரும் செய்து வந்தார்.
துணைவேந்தர்களுடன் இணக்கம்
எந்தத் துணைவேந்தர் வந்தாலும் அவருக்கு ஆரோக்கியமான ஆளும்கட்சியாக இருப்பது இவரது ஸ்டைல். அதன்பயனாக பல புதிய புராஜக்ட்டுகளையும் பெற்று வந்தார். இதன் பின்னணியில் அவர் மேற்கொண்ட செயல்கள் எல்லாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. வலையில் விழும் மாணவிகளை அந்த படிப்புடன் அவர்கள் விட்டுவிடுவது இல்லை. தங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் அழைக்கின்றனர். இவரது டார்ச்சருக்குப் பயந்து, வெளிமாநிலங்களில் செட்டில் ஆனவர்கள் ஏராளம்" என்றார் வேதனை கலந்த முகத்துடன்.
ஆய்வு படிப்பு மட்டுமல்லாமல், எந்தெந்த வழிகளில் மாணவிகளை வளைக்க முடியும் என்பதையே சில பேராசிரியர்கள் இலக்காக வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அப்படித்தான், விழுப்புரத்தில் ஒரு பேராசிரியர் மீது 32 மாணவிகள் புகார் கொடுத்த சம்பவமும் அரங்கேறியது. அதைப் பற்றிப் பார்ப்போம்.