பாலியல் 'தாண்ட'வங்களில் டாப் இடத்தில் சென்னை பல்கலை.- கொஞ்சம் காமம்; நிறைய காசு! (5)
Recommended Video
' உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா சார்...பாலியல் புகார்கள் அதிகம் வரக்கூடிய பல்கலைக்கழகங்களில் சென்னைப் பல்கலைக்கழகத்துக்குத்தான் முதல் இடம். ஆண்டுக்கு சராசரியாக 18 புகார்கள் வருகின்றன.
பேராசிரியர்களின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற அச்சம் துணைவேந்தர்களிடம் இருக்கிறது. அதனால்தான், இந்தப் புகார்களையெல்லாம் கிடப்பில் போட்டுவிடுகின்றனர். புகார்களை நீர்த்துப் போகச் செய்வதற்கென்றே தனியாக ஒரு குழு இயங்குகிறது. இதையும் மீறி பேராசிரியர்களை நேரடியாக அழைத்துக் கண்டிக்கும் துணைவேந்தர்களும் இருந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு எதிராக கவர்னர் ஆபீஸ் வரைக்கும் மொட்டைக் கடிதங்களைப் பறக்கவிட்டிருக்கிறார்கள்' எனக் கவலையோடு விவரித்தார் பேராசிரியர் ஒருவர். அவரிடம், ' பி.எச்டி ஆய்வில் நடக்கும் தவறுகளை எப்படிக் களைவது?' என்றோம்.
மாணவிகள் துணிச்சல் தேவை
' ரொம்ப சிம்பிள் சார்... ஆய்வின் ஒவ்வொரு கட்டமும் வெளிப்படையாக நடக்க வேண்டும். மாணவியின் ஆய்வுப் பணிகள் எந்தளவுக்கு நடந்து வருகிறது? கைடு எப்படி நடந்து கொள்கிறார்? வெளிநாட்டு எக்ஸாமினர்கள், லோக்கல் எக்ஸாமினர்கள் நோக்கம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆராய வேண்டும். மாணவிகளும் தங்களுக்கு நேரக்கூடிய துன்பங்களைப் பற்றி வெளிப்படையாகப் புகார் கொடுக்க வேண்டும். இதனால், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படாத வகையில் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியை நேர்மையானதாக நடத்த வேண்டும். இப்படிச் செய்தால் பேராசிரியர்களுக்கு ஒரு பயம் வரும். ஆனால், இங்கு ஒவ்வொரு பேராசிரியர்களின் பின்னாலும் ஓர் அரசியல் கட்சி இருக்கிறது. அந்தப் பயம்தான் அரசியல் ஆசியோடு பதவிக்கு வரும் துணைவேந்தர்களை ஆட்டுவிக்கிறது' என்றார் ஆதங்கத்துடன்.
ராஜ்யசபா எம்பியாக போகிறேன்
அப்படித்தான், கார்டன் வாசலிலேயே தவம் கிடந்த ஒரு பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வந்தார். ' அம்மாவை இப்பத்தான் பார்த்துட்டு வந்தேன். என்னை ராஜ்யசபா எம்.பி ஆக்குவதாகச் சொல்லியிருக்கிறார்' என பல்கலைக்கழகத்திலேயே பெருமை பேசுவார் அந்த நபர். பணிக்காலம் முழுவதும் 'தாண்டவ'மாடிவிட்டுத்தான் அவர் சென்றார். அவர் பணிபுரிந்த துறையில், ஒரு மாணவர்கள்கூட படிக்க வந்ததில்லை என்பது ஆச்சரியம். இதேபோல், மாணவர்களே இல்லாத சில துறைகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ளன. எனவே, வகுப்புகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தி.மு.க, அ.தி.மு.க என பேராசிரியர்களில் இரு பிரிவு உண்டு. ' கழகத்தின் மாவட்ட செயலாளர்கள்கூட இப்படிப் பேசியிருக்க மாட்டார்கள்' எனக் கூறும் அளவுக்குக் கரைவேட்டி கட்டிய வி.சிக்கள் இன்னமும் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
கெஞ்சும் மாணவிகள்
' சார்...ஒரு டிகிரி முடிக்கறதே எங்க குடும்பத்துல பெரிய விஷயம். காலில் விழுந்து கெஞ்சித்தான் ஆய்வு படிப்பைத் தேடி வருகிறோம். கைடு வீட்டை சுத்தம் பண்றதுல இருந்து சமையல் வேலை வரைக்கும் செஞ்சிருக்கேன். ஒருதடவையாவது என்னோட இருன்னு கைடு சொல்றார் சார். நாளுக்கு நாள் டார்ச்சர் அதிகமாகிட்டே போவுது...' - சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவரிடம் கண்ணீர்மல்க மாணவி ஒருவர் பேசிய வார்த்தைகள் இவை. உடனே சம்பந்தப்பட்ட கைடை நேரடியாக அறைக்கு வரவழைத்த வி.சி, ' ஏன் சார் இப்படியெல்லாம் பண்றீங்க. ஏழைப் பொண்ணு சார்..உடனடியாக ஆய்வை முடிக்க உதவி செய்யுங்கள்' என வேண்டுகோள் வைத்தார். இதற்குப் பதில் கொடுத்த அந்த கைடு, ' எல்லாம் எங்களுக்குத் தெரியும் சார்...' என்றதோடு அங்கிருந்து கிளம்பிவிட்டார். ' இதுதான் கைடுகளின் மனநிலை' என்கிறார் கல்வியாளர் ஒருவர். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் என்றில்லாமல், தனியார் கல்லூரிகளின் பேராசிரியர்கள் சிலரும் வகுப்பறையிலேயே ஆட்டம் போடுகின்றனர். பெரும்பாலும் அறிவியல் வகுப்புகளில்தான் அத்துமீறல்கள் நடக்கின்றன.
சகிக்க முடியாத சீண்டல்
அப்படித்தான் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஒருவர் மீது 32 மாணவிகள் ஒருசேர புகார் கொடுத்தனர். ' இப்படித் திரண்டு வருவார்கள்' என அந்த மருத்துவக் கல்லூரி டீன் எதிர்பார்க்கவில்லை. புகாரில், ' அறுவை சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் அந்தப் பேராசிரியர் அருவறுப்பாக நடந்து கொள்கிறார். அவருடைய பாலியல் சீண்டலை எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து மீடியாக்களிடம் அந்த டீன் என்ன பேசினார் தெரியுமா?...' மாணவிகள் கூறுவது எந்த அளவுக்கு உண்மைத்தன்மை கொண்டது என்பதைப் பற்றி அவரிடம் விசாரிக்க வேண்டும். புகாருக்குள்ளான உதவிப் பேராசிரியரின் மனைவியும் இதே கல்லூரியில்தான் பணிபுரிகிறார். எனவே பேராசிரியர் மீதான புகாருக்கு முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சிலர் காழ்ப்புணர்ச்சியின் பேரிலும் கூறியிருக்கலாம். அவரிடம் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்புவோம்' என்றார்.
பழிவாங்கப்பட்ட மாணவிகள்
இத்தனை மாணவிகள் திரண்டு வருவதன் பின்னணியில் காழ்ப்புணர்ச்சி இருக்குமா என்பதைப் பற்றி அந்த டீன் ஆராயவில்லை. இந்த விவகாரத்தை விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவையும் நியமித்தனர். இதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றிய எந்தத் தகவலும் வெளிவரவில்லை. அந்த மாணவிகளை எந்தளவுக்குப் பழிவாங்கியிருப்பார்கள் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதேநிலைதான், தமிழகக் கல்விக் கூடங்களில் நிலவுகிறது.
ரசாயன மாற்ற முயற்சி
இதே பாணியில்தான் தூத்துக்குடியிலும் ஒரு சம்பவம் நடந்தது. புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரரின் பெயரில் இயங்கும் கல்லூரியில், மாணவிகளிடம் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார் வேதியியல் பேராசிரியர் ஒருவர். பொதுவாக, அறிவியல் வகுப்புகளில் இருக்கும் பிராக்டிகல் மதிப்பெண், மிகப்பெரிய துன்பம். இதைக் காரணமாக வைத்துக் கொண்டு வளைப்பு முயற்சிகளில் சில பேராசிரியர்கள் ஈடுபடுகின்றனர். முத்தான அந்த வேதியியலின் முகத்திரையைக் கிழிக்க, ஒவ்வொரு காலகட்டத்திலும் மாணவிகள் முயற்சி செய்தனர். ' அவரது பாலியல் அத்துமீறலுக்கு முடிவு கட்டுங்கள்' என முதல்வரிடமும் துறைத் தலைவரிடமும் கோரிக்கை வைத்தனர். வழக்கம்போல, புகாரைக் கிடப்பில் போட்டது நிர்வாகம். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த ஆயிரம் மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டுத் தெருவில் அமர்ந்தனர். தர்ணாவால் எந்தப் பயனும் நேரவில்லை. வில்லங்க பேராசிரியரும் தொடர்ந்து வலைவிரித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதே வரிசையில் பேராசிரியர் ஒருவர் செல்போனில் பாலியல் பேசுவதை ரசிக்காத மாணவி ஒருவர், கல்லூரி நிர்வாகியான அருட்தந்தையிடம் புகார் கொடுத்தார்.
அதற்கு அவர் சொன்ன பதில்...' அவன் தண்ணியடிச்சா...அப்படித்தான்மா பேசுவான்...'.