அரசுக் கல்லூரிகளுக்கு விரைவில் துப்புறவு பணியாளர்கள் நியமனம்.. அமைச்சர் தகவல்
சென்னை: அரசு கல்லூரிகளில் புதிதாக துப்புறவு தொழிலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி, ‘‘அரசு கல்லூரிகளில் துப்புறவு தொழிலாளர்கள் நியமிக்கப்படுவார்களா?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பழனியப்பன், "தமிழ்நாட்டில் மொத்தம் 670 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 74 அரசு கல்லூரிகள் ஆகும். பெண்களுக்காக 18 மகளிர் கல்லூரிகள் உள்ளன. இந்த முறை முதல்வர் ஜெயலலிதா 36 புதிய கல்லூரிகளை தொடங்கி வைத்தார். அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக நீதிமன்ற தடை இருப்பதால் அவர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளில் 34 புதிய நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் கல்லூரிகளுக்கு விரைவில் துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்படுவார்கள்"என்று கூறியுள்ளார்.