ராமஜெயம் கொலையில் உறவினர்கள் மீது சந்தேகம்... சம்மன் அனுப்புகிறது சிபிசிஐடி
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியின் நிழலைக் கூட நெருங்கமுடியாத நிலையில், தற்போது சிபிசிஐடி போலீசாரின் சந்தேகம், நேருவின் உறவினர்கள் சிலர் மீதே திரும்பியுள்ளதாம். அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்களாம்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் 29.3.2012ல் திருச்சியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகளைப் போலீஸார் கண்டுபிடிக்கவில்லை. இதனால், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் பலமுறை அவகாசம் வழங்கியது. ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம், குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன என சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கு அக்டோபர் 28ல் விசாரணைக்கு வந்தபோது, ராமஜெயம் கொலை தொடர்பாக பல தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. 3 மாதம் அவகாசம் அளித்தால் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாருக்கு டிசம்பர்18ம் தேதி வரை 2 மாதம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ரவி வாதிட்டனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான ரகசிய அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து சிபிசிஐடி எஸ்பி அமித்குமார்சிங் தாக்கல் செய்தார். அந்த கவர் பதிவாளர் முன்னிலையில் திறக்கப்பட்டு அறிக்கை நகல் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. பின்னர் விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
உறவினர்கள் மீது சந்தேகம்
ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளியின் நிழலைக்கூட நெருங்க முடியாத சிபிசிஐடி போலீசார், புதிய கோணங்களில் விசாரணையை நடத்த திட்டமிட்டுள்ளனராம். முக்கியமாக நேரு மற்றும் ராமஜெயத்தின் நெருங்கிய உறவினர்கள் சிலரை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.
அரசியல் எதிரி
உறவினராக இருந்து அரசியல் எதிரியாகிவிட்ட சிலர் இந்தக் கொலைக்கு பின்னணியில் இருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்மன்
இந்த உறவினர்களை விசாரிக்க சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளார்களாம். அதேபோல திருச்சி மாவட்டத்தில் நேருவுக்கு இருந்த உட்கட்சி பகையாளிகளையும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.
திமுக பிரமுகர்
திருச்சி மாவட்ட, தி.மு.க., நிர்வாகி ஒருவர், ராமஜெயத்தை கொலை செய்ய, சில ரவுடிகளிடம் யோசனை கேட்டதை அறிந்து, அந்த, தி.மு.க., பிரமுகரை தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர, சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்; அதற்கான பணிகளையும் துவக்கிவிட்டதாக தெரிகிறது.