வெள்ளத்தில் வாக்காளர் அட்டையை இழந்தவர்களுக்கு புதிய அட்டை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னையில் இதுகுறித்து ராஜேஷ் லக்கானி கூறுகையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வாக்காளர்கள் பலர் அடையாள அட்டைகளை இழந்து விட்டனர். அவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
புது வாக்காளர் அடையாள அட்டை கேட்டு இதுவரை சென்னையில் 9 ஆயிரத்து 500 பேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 224 பேர், திருவள்ளூரில் 300 பேர், கடலூரில் ஆயிரத்து 934 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான புது வாக்காளர் அட்டை ஜனவரி முதல் வாரத்தில் அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள், பீகார், மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களிலிருந்து அனுப்பப்பட உள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள், ஜனவரி 20-ந் தேதிக்குப்பிறகு தமிழகத்துக்கு வரவாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.