புத்தாண்டு: திருச்செந்தூர் முருகனை காண பல மணி நேரம்.. திருப்பதியில் 4 மணி நேரத்தில் தரிசனம்
ஆங்கில புத்தாண்டு தினத்தை ஆலயங்களில் தொடங்கியவர்கள், பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் 4 மணி நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூரில் 6 மணி நேரம் கா
திருப்பதி/தூத்துக்குடி: புத்தாண்டு பிறப்பினை இளைய தலைமுறையினர் உற்சாகமாக விடிய விடிய கொண்டாடி மகிழ்ந்தனர். பெரும்பாலோனோர் ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்து 2017ஆம் ஆண்டினை வரவேற்றனர்.
திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், மதுரை, திருப்பதியில் உள்ள ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் புத்தாண்டு தினமான நேற்று தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கடலில் நீராடிய பக்தர்கள், நாழிக்கிணறில் மணிக்கணக்கில் வரிசையில் நின்று நீராடினர்.
பாதை யாத்திரை
தென் மாவட்டங்களில் இருந்து பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் காவடி சுமந்து வந்து முருகனுக்கு காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் அரோகரா முழக்கம் ஆலயம் எங்கும் எதிரொலித்தது.
மணிக்கணக்கில் காத்திருப்பு
31ம் ஆம் தேதி நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் விடிய விடிய முருகனை தரிசிக்க காத்திருந்தனர். பொது தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் முருகனை தரிசிக்க பல மணி நேரம் ஆனது. 250 ரூபாய் கட்டண தரிசத்தில் நின்றிருந்தவர்கள் 4 மணி நேரத்திலும் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் நின்றிருந்தவர்கள் 5 மணி நேரத்திலும் முருகனை தரிசனம் செய்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம்
தமிழகம் முழுவதும் முக்கிய ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்திலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய, உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்வர். பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய பண்டிகை நேரங்களில் சாமி தரிசனம் செய்ய வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் ஆகும். பொது தரிசன வரிசையில் நிற்பவர்கள் 10 மணிநேரம் கூட காத்திருப்பார்கள்.
விஐபி தரிசனம்
புத்தாண்டு தினத்தை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். நள்ளிரவு 12.30 மணிக்குமேல் பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள் திருப்பாவை பாசுரம் பாடினர். பின்னர் அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.40 மணிவரை வி.ஐ.பி. பக்தர்கள் தரிசனத்துக்காக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். விஐபி பக்தர்கள் ராமுலவாரிமேடை வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.வைகுண்டம் கியூ காம்ளக்ஸ் வழியாக இலவச தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் 4 மணிநேரத்தில் ஏழுமலையான காண முடிந்ததாக கூறினர். திவ்ய தரிசனத்துக்கு 2 மணிநேரமும் ஆனதாக பக்தர்கள் கூறினர்.