புத்தாண்டு கொண்டாட்டங்கள்: 15 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 34 ஆம்புலன்ஸ்கள் தயார்!
சென்னை: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது விபத்துக்கள் ஏதும் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் வகையில் 34 ஆம்புலன்ஸ்களும், 15 நடமாடும் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக ‘108' ஆம்புலன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அந்த சமயத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள், விபத்துகள் நடைபெற்றால் அவற்றில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
இதன்படி, 34 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. மேலும், 15 நடமாடும் மருத்துவக் குழுக்கள் சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு அவசரக் கால மருத்துவ உதவியாளர், ஒரு தன்னார்வத் தொண்டரும் இருப்பர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் மெரீனா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, அண்ணாசாலை, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, கிழக்குக் கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதியில் இந்தக் குழுவினர் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.
இந்தக் குழுவினரிடம் முதலுதவி அளிப்பதற்குத் தேவையான கருவிகள், மருந்துகள், தூக்கிச் செல்லக்கூடிய ஆக்ஸிஜன் உருளைகள் ஆகியவை இருக்கும். இந்தக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்கள் அல்லது மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டவர்களுக்குத் தேவையான முதலுதவியை அளிப்பார்கள்.
இந்த நடமாடும் மருத்துவக் குழுவில் சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 50 பேர் தன்னார்வத் தொண்டர்களாக உள்ளனர். கூட்ட நெரிசலில் இருந்து இந்தக் குழுவினர் வேறுபட்டுத் தெரிவதற்கு ஒளிரும் ஆடைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டுகளைப் போலவே நிகழாண்டும் சென்னை போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து இந்தச் சேவையில் ஈடுபட உள்ளோம்.
டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி முதல் 12.15 மணி வரையில் ஒரே இடத்தில் பலர் செல்போன் உபயோகிக்கும் வாய்ப்பு உள்ளதால், அந்த சமயத்தில் அவசர அழைப்புகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்படும்.
இதனால், போலீசாரின் கம்பியில்லாத தொலைபேசி வழியாகவும் தகவல்கள் பெறும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.