புத்தாண்டை வரவேற்கிறேன் என குடித்துவிட்டு ஈ.சி.ஆரில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை
மாமல்லபுரம்: புத்தாண்டை கொண்டாடுகிறேன் என்ற பெயரில் நள்ளிரவில் மது அருந்திவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரம் காவல் நிலைய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி விதிமுறைகள் பற்றி கூறுகையில்,
புத்தாண்டையொட்டி கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ஹோட்டல்கள் அவற்றை பாதுகாப்பான இடங்களில் நடத்த வேண்டும். நிகழ்ச்சியின்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ஹோட்டல் நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.
கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு மேடை அமைப்பவர்கள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் தகுதிச் சான்று பெற வேண்டும். மது அருந்துபவர்களை நீச்சல் குளத்தில் குளிக்க நட்சத்திர ஹோட்டல்கள் அனுமதிக்கக் கூடாது. கடற்கரையோர ஹோட்டல்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கடலில் குளிக்க அனுமதி அளிக்கக் கூடாது.
அரசு அனுமதி பெற்ற பார்கள் எதுவும் இரவு 12 மணிக்கு மேல் திறந்திருக்கக் கூடாது. தீயணைப்பு துறையினர் அனுமதி அளிக்கும் இடங்களில் மட்டும் தான் வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்த வேண்டும். இன்னிசை மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகள் பிறருக்கு இடையூறாக இல்லாதவாறு ஹோட்டல்கள் நடத்த வேண்டும்.
வரும் 31ம் தேதி நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்கிறோம் என்று கூறி கிழக்கு கடற்கரை சாலையில் மது அருந்திவிட்டு கார், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரின் எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
போலீசாரின் நிபந்தனைகள் அடங்கிய பிரதிகள் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் அளிக்கப்பட்டது.