தாய் இருமியதால் மிரண்ட நாய்... பிறந்து 3 நாளே ஆன ஆண் சிசுவைக் கடித்துக் கொன்ற பரிதாபம்
நியூயார்க்: டிவி பார்த்துக் கொண்டிருந்த தாய் இருமியதால் மிரண்டு போன நாய், கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சிசுவை கடித்துக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சான் டியாகோ நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அத்தம்பதியினர் தங்கள் வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த அந்த சிசுவை படுக்கையறையில் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, கணவரும் மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அருகில் அவர்களது செல்ல நாயும் இருந்தது.
அப்போது, திடீரென அப்பெண்ணுக்கு இருமல் வந்துள்ளது. அவர் பயங்கரமாக இருமியதைக் கண்டு அவர்களது நாய் மிரண்டு ஓடியது. நேராக படுக்கையறைக்குள் சென்ற அந்த நாய், அங்கிருந்த சிசுவைக் கடித்துக் குதறியது.
அழுகை சத்தம் கேட்டு விரைந்து சென்ற பெற்றோர், நாயிடமிருந்து மீட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்தது விரைந்து வந்த விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நாயைப் பிடித்து சென்றனர். அந்த நாய்க்கு வெறி நாய்கடி நோயை ஏற்படும் ‘ரேபிஸ்' கிருமி தாக்கியுள்ளதா என பரிசோதிக்க அந்த நாயை 10 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.