கலப்பட தார்: முதலீட்டாளர்கள் மாநாடுக்கு போடப்பட்ட சாலைகள் சேதம்- பலகோடிரூபாய் வீண்
சென்னை: வடகிழக்குப் பருமழையின் தீவிரவத்தால் தமிழகம் முழுவதும் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. கலப்பட தார்கலவை பயன்படுத்தப்பட்டதன் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட காமராஜர் சாலை சமீபத்தில் பெய்த மழையில் ஜல்லி, கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமானது. முதல்வர் செல்லும் முக்கிய சாலை என்பதால் தற்போது மீண்டும் அங்கு அவசர, அவசரமாக சாலை போடும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய சாலைகளில் மெரினா காமராஜர் சாலையும் ஒன்று. 12 கி.மீ நீளம் கொண்ட இந்த சாலையில் கல்லூரிகள், எழிலக வளாகம், தலைமை செயலகம் அமைந்துள்ளன. இந்த சாலை வழியாக தினமும் லட்சக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர். நீதிபதிகள், முதல்வர், அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். இதனால், நெடுஞ்சாலைத்துறையினர் தனிக்கவனம் செலுத்துவது வழக்கம். இந்த சாலைகளில் தூசிகளோ, மண்ணோ சேராத அளவுக்கு தினமும் ஏராளமான துப்புறவு தொழிலாளர்கள் சுத்தம் செய்வதை பார்க்க முடியும்.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் சமீபத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி ரூ.15 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. 20 நாட்களாக பெய்த கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதில், காமராஜர் சாலை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதற்கு, தரமான தார்கலவை பயன்படுத்தி சாலை அமைக்கப்படாததே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாடு
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்காக 100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் 32 கோடி ரூபாய் ரோடு போடுவதற்காக செலவிடப்பட்டது. அவசரம் அவசரமாக போடப்பட்ட சாலைகள் அதன் தரத்தை வெளிப்படுத்திவிட்டது இந்த மழைக்காலம்.
சின்னாபின்னமாக சாலைகள்
நந்தம்பாக்கம் வர்த்தக மையம் இருக்கும் இடத்தில் போடப்பட்ட சாலைகள் மட்டும் சுமாராக இருக்கிறது. அதேநேரத்தில் முதலீட்டாளர் கள் தங்கிய ஹோட்டலில் இருந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வருகிற உள்ள அனைத்து ரோடுகளும் இந்த மழையில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டன.
கந்தரகோலம் ஆன சாலைகள்
போயஸ்தோட்டத்தில் இருந்து முதல்வர் செல்லும் சாலைகள் அனைத்தும் அவசரகதியில் போடப்பட்டன. இந்த சாலைகள் எல்லாமே மழை வெள்ளத்திற்கு தங்களின் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டன. இப்போது மக்களின் பாடுதான் பெரும்பாடாக உள்ளது.
கலப்பட தார்சாலைகள்
குறிப்பாக, சாலைகளில் பிட்மென் எனப்படும் தார்கலவை 67 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், மண்ணெண்ணெய் அதிகம் கலந்த தார் கலவையால் பிடிமானம் குறைந்து, மூன்று மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டன. இதனால் பலகோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தரமில்லாத சாலைகள்
தரமில்லாத தார்கலவை பயன்படுத்தி போடப்படும் சாலைகள் ஓராண்டுக்கூட தாக்குபிடிப்பதில்லை. குறிப்பாக, மழைக்காலத்தில், தரமில்லாத தார்கலவையில் சாலை போடப்படும் பட்சத்தில் தாரில் அதிகளவு கலந்துள்ள மண்ணெண்ணெய் தண்ணீருடன் அடித்துச் செல்லப்படுகிறது. அதன்பின், சாலைகளில் ஜல்லி கற்கள் மட்டுமே எஞ்சி நிற்பதால் அந்த சாலையை வாகனங்கள் பயன்படுத்தும்போது குண்டும் குழியுமாகி விடுகிறது.
மீண்டும் அவசரம்
தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் செல்லும் காமராஜர் சாலையும் சேதமாகியுள்ளது. முதல்வர் செல்லும் சாலை என்பதால் தற்போது மீண்டும் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, நெடுஞ்சாலைத்துறை அவசர, அவசரமாக புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தரமான சாலைகள் போடப்படுமா?
பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் சாலை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இந்த சாலை முறையாக போடப்பட்டிருக்கும் பட்சத்தில் முதல்வர் செல்லும் சாலை எனக்கூறி தற்போது மீண்டும் புதுப்பிக்க வேண்டி நிலை ஏற்பட்டு இருக்காது. இதனால், அரசுக்குதான் வீண் செலவு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.