திருமணம் முடிந்த 15 நாட்களில் விபத்து – மணமகனின் 2 கால்களும் துண்டான பரிதாபம்
புதுகை: புதுக்கோட்டையில் திருமணம் முடிந்த 15 நாளில் புதுமாப்பிள்ளை ஒருவர் விபத்தில் சிக்கி 2 கால்களையும் இழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள வீரனேரியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் பெரியண்ணன். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக மேலூரில் நேர்முக தேர்வு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பெரியண்ணன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
மேலூர்- சிவகங்கை ரோட்டில் உள்ள கணபதியாபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் லாரியின் முன்பக்கத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து சென்றது. விபத்தில் பெரியண்ணனின் 2 கால்களும் லாரியில் சிக்கி நசுங்கி துண்டானது.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டியராஜன் என்பவரை கைது செய்தனர்.