சோகத்தில் முடிந்த ‘தல தீபாவளி’... திருமணமான ஒரே மாதத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை
வேலூர் மாவட்டத்தில் தலை தீபாவளி கொண்டாட தாய் வீட்டிற்குச் சென்ற புதுப்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: தலை தீபாவளி கொண்டாடுவதற்காக தாய் வீட்டிற்கு வந்த புதுப்பெண் ஒருவர் விஷம் குடித்து தர்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (25). கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னர் இவருக்கும், ராஜி (27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ராஜி, விஜயலட்சுமியின் உறவுக்காரர் தான். ஆனால், இந்தத் திருமணத்தில் ராஜிக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.
கட்டாயத்தின் பேரில் விஜயலட்சுமியைத் திருமணம் செய்து கொண்ட ராஜி, திருமணமான சில தினங்களிலேயே வீட்டை விட்டு ஓடி விட்டாராம். பின்னர் மீண்டும் அவரைக் கண்டுபிடித்து அழைத்து வந்து விஜயலட்சுமியோடு வாழ நிர்பந்தித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், தலை தீபாவளி கொண்டாடுவதற்காக விஜயலட்சுமி தனது கணவரோடு தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சோகமான மனநிலையுடன் காணப்பட்ட விஜயலட்சுமி, நேற்று காலை குளிக்கச் சென்றபோது, பாத்ரூமில் வைத்தே விஷம் அருந்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து வாந்தியெடுத்த விஜயலட்சுமியை அவரது பெற்றோர் அருகில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு விஜயலட்சுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வேலூர் கொண்டு செல்லும் வழியிலேயே விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண வாழ்க்கையில் நேர்ந்த கசப்பான அனுபவத்தால் விஜயலட்சுமி, தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
திருமணமான ஒரே மாதத்தில் விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால், அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.