புதுத் தாலியின் வாசம் கூட போகவில்லை.. அதற்குள் இப்படி ஒரு முடிவா?
திருமணமான 6-வது நாளில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டை: கட்டிய புதுத்தாலியின் ஈரம்கூட காயவில்லை... கல்யாணம் ஆகி ஆறே நாள்... நித்யா இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்!
புதுக்கோட்டை வலப்பிரம்மன்காடை என்ற கிராமத்தை சேர்ந்தவர் நித்யா. திருநாளூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். போன 12-ம் தேதிதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
ஆனால் திருமணம் ஆன நாளிலிருந்தே புதுமணப் பெண் முகத்தில் கல்யாண களை இல்லை. புது வாழ்வு மலர போகிறது என்ற சந்தோஷம் இல்லை. அதோடு பொண்ணு-மாப்பிள்ளைக்கு தினமும் சண்டை வேறு வந்துள்ளது. கடந்த ஆறு நாளுமே மனக்கசப்புதான்.
தகராறு முற்றியது
இந்த மனக்கசப்பு தகராறாக வெடித்து கிளம்பியது. இவ்வளவு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்தால் இப்படி சண்டை போட்டு கொள்கிறார்களே என்று பெற்றவர்கள் கண்ணீர் சிந்தினார்கள். கடைசியில் இந்த தகராறு முற்றி போகவே மாப்பிள்ளை சுந்தராஜன் தற்கொலைக்கு முயன்றார்.
[வேலைக்கார பெண்ணுடன்... மனசு தறிகெட்டு நடந்தால் விபரீதம்தானே ஏற்படும்?! ]
தற்கொலை முயற்சி
இதனால் பதறிப்போன பெற்றோர் சுந்தர்ராஜனை காப்பாற்றி விட்டனர். ஆனால் நானும் சளைத்தவள் இல்லை என்று கல்யாண பெண் நித்யாவும் தற்கொலைக்கு முயன்றார். அவரையும் காப்பாற்றினார்கள் சுந்தர்ராஜனின் பெற்றோர். பின்னர் இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது, இரண்டு பேரும் முட்டிக் கொண்டு விபரீதமாகிவிடும் என்று நினைத்து நித்யாவின் பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
விஷம் சாப்பிட்ட நித்யா
கொஞ்ச நாள் தங்களுடன் இருக்கட்டும், பிறகு புத்தி சொல்லி அனுப்பி வைக்கிறோம், அதற்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து நித்யாவை தங்களுடன் பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் வீட்டுக்கு சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நித்யா விஷம் சாப்பிட்டுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக நித்யாவை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் வழியிலேயே நித்யாவின் உயிர் பரிதாபமாக பிரிந்துவிட்டது.
போலீசார் விசாரணை
தகவலறிந்து சுந்தராஜன், மற்றும் அவரது பெற்றோரும் ஓடிவந்தார்கள். நித்யாவின் உடலை கண்டு எல்லாருமே கதறி அழுதார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர். சுந்தர்ராஜன், அவருடைய பெற்றோர், மற்றும் நித்யாவின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பக்குவமற்று செயல்
கல்யாணம் ஆகி ஆறே நாளில் புதுமணப்பெண் இறந்தது அதிர்ச்சிகரமான மற்றும் துயரகரமான விஷயம்தான். இப்போது கதறி அழுது என்ன பயன்? இரு தரப்பு பெற்றோரும் பெண்-மாப்பிள்ளையின் முழு சம்மதத்தை பெற்றார்களா என தெரியவில்லை. ஒருவேளை முழு சம்மதம் தெரிவித்திருந்தாலும் தங்களுக்குள் உடன்படாவிட்டால் அமைதியாக விவாகரத்து செய்து வாழ தொடங்கியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, இப்படி ஆளாளுக்கு தற்கொலையை கையில் எடுக்கும் அளவுக்கு இருவருமே பக்குவமற்று இருப்பதையே இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.