நியூஸ் 18 தமிழ்நாடு எடிட்டர் குணசேகரனுக்கு பால கைலாசம் விருது-அரியலூர் அனிதாவுக்கு அர்ப்பணித்தார்!
மூத்த பத்திரிகையாளர் குணசேகரனுக்கு பால கைலாசம் விருது வழங்கப்பட்டது.
சென்னை: நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலின் முதன்மை செய்தி ஆசிரியரான மூத்த பத்திரிகையாளர் மு. குணசேகரனுக்கு பால கைலாசம் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது. தாம் பெற்ற விருதை நீட் தேர்வு காவு கொண்ட அரியலூர் அனிதாவுக்கு அர்ப்பணித்தார் குணசேகரன்.
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் மகன் பால கைலாசம். தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து முன்னோடியாக திகழ்ந்தவர். சிறந்த ஆவணப்பட இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றவர் பால கைலாசம்.
2014-ம் ஆண்டு பால கைலாசம் காலமானார். 2015-ம் ஆண்டு முதல் பால கைலாசம் நினைவாக ஊடக ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பரிசு கேடயத்துடன் ரூ50,000 தொகையைக் கொண்டது இந்த விருது.
நடப்பாண்டு விருதுக்கு தொலைக்காட்சி பிரிவில் நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் செய்தி ஆசிரியரான குணசேகரன் சிறந்த தொலைக்காட்சி வல்லுநராக தேர்வு செய்யப்பட்டார். தி வயர், ஸ்க்ரால் இணையத் தளத்தின் சோஹினி சாட்டோபாத்யாய், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ஹரீஷ் தாமோதரன் ஆகியோருக்கும் பால கைலாசம் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் நேற்று நடைபெற்றது. பால கைலாசம் விருதைப் பெற்ற நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் முதன்மை செய்தி ஆசிரியர் குணசேகரன், தமக்கு அளிக்கப்பட்ட விருதை நீட் தேர்வு காவு கொண்ட அனிதாவுக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் குணசேகரன் பதிவிட்டுள்ளதாவது:
சமூக முன்னேற்றத்துக்காக ஊடகங்களைப் புதுமையான வகையில் பயன்படுத்தியமைக்காக பால கைலாசம் விருதைப் பெற்றதில் மகிழ்ச்சி. நீட் தொடர்பான விவாதங்கள் மற்றும் சிறப்பு செய்தித் தொகுப்புகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
கைலாசம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் விருதளிப்பு நிகழ்வை நடத்திவரும் Cinema Rendezvous குழுவினருக்கும் துறைசார் வல்லுநர்களான தேர்வுக்குழுவினருக்கும் நன்றி. ஏற்புரையில், நீட் தேர்வால் மருத்துவராகும் வாய்ப்பை இழந்து, தனது மரணத்தின் மூலம் நாட்டின் மனசாட்சியை உலுக்கிய சகோதரி அரியலூர் அனிதாவுக்கு இந்த விருதை அர்ப்பணித்தேன். நிறைவான, நெகிழ்வான தருணம்!
இவ்வாறு குணசேகரன் பதிவிட்டுள்ளார்.