கருத்துக்கணிப்பு: அரசு கேபிளில் நியூஸ் 7 துண்டிப்பு- ஆபிசை கொளுத்துவோம் என மிரட்டல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையையோட்டி நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் தினமலர் செய்திதாளும் இணைந்து நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு எதிராக செயல்படுவதாக கூறி நியூஸ்7 தமிழ் செய்தியாளர் சஞ்ஜீவியை அதிமுகவினர் தாக்க முயற்சி செய்தனர். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தை கொளுத்துவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கருத்துக்கணிப்புகள் வெளியாவதை விரும்பாததால், அரசு கேபிள் டிவியிலிருந்து நியூஸ்7 சேனல் ஒளிபரப்பை மாநிலத்தின் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் எந்தக் கூட்டணி அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என கடந்த 3 நாட்களாக தினமலர் நாளிதழும், நியூஸ்7 சேனலும் மண்டலவாரியாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அதிமுகவிற்கு எதிரான அலை
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை எனக் கருதப்படுகிறது. கருத்துக்கணிப்பின் முதல்கட்டமாக, மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில், திமுக 34 தொகுதிகளிலும், அதிமுக 23 தொகுதிகளில் வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்து
தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடக்கு மண்டலம் என தமிழகம் முழுவதும் திமுக அலை வீசுவதாகவே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சேனலை கொளுத்துவோம்
அதிமுக அரசின் தேர்தல் அறிக்கை தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகம் சென்ற செய்தியாளர் சஞ்ஜீவியை அங்கிருந்த அதிமுகவினர் தாக்க முற்ப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கருத்துக்கணிப்பால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தை கொளுத்துவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
சேனல் துண்டிப்பு
கருத்துக்கணிப்பால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைமை மேற்கொண்டு பிற மண்டலங்களின் கருத்துக்கணிப்புகள் வெளியாவதை விரும்பாததால், அரசு கேபிள் டிவியிலிருந்து நியூஸ்7 சேனல் ஒளிபரப்பை மாநிலத்தின் பல இடங்களில் துண்டித்துவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இயக்குநர் மாற்றம்
அரசு கேபிள் டிவியின் தலைவராக இருப்பவர், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் என்பதால் அதிகாரிகளின் துணைகொண்டு அதிமுக இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அரசு கேபிள் டிவியில் அதிமுகவுக்கு எதிர் நிலைப்பாடுகள் கொண்ட சேனல்களின் ஒளிபரப்புத் துண்டிக்கப்படுவதாக பல கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன் மாற்றப்பட்டார். ஆனாலும் ராதாகிருஷ்ணன் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருமா?
அரசு கேபிள் டிவியைத் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதிமுகவுக்கு பாதகமாக கருத்துக்கணிப்பு வெளியிட்டதால் நியூஸ்7 சேனல் ஒளிபரப்பு பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதும், சேனலை கொளுத்துவோம் என்று அதிமுகவினர் மிரட்டியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.