நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு... திருச்சி ராணியும் கூட எம்.எல்.ஏ சீட் கேட்டிருக்காங்களாம்ல....
சென்னை: தமிழ்நாட்ல மொத்தம் 234 சட்டசபை தொகுதிதான் இருக்கு... ஆனா அதிமுகவில எம்.எல்.ஏ சீட் கேட்டு அப்ளிகேசன் போட்டவங்க மொத்தம் 26,174 பேரு. கட்சிக்கு வந்த வருமானம் 28 கோடி.. அடேயப்பா என்று அங்கலாய்கிறார்கள் எதிர்கட்சியினர்.
தேர்தல்களத்தில் எதிரிகளையே காணோம்னு சொன்ன ஜெயலலிதாவிற்கு ஆட்சியை தக்க வச்சுக்க உள்ளூர ஆசையிருந்தாலும் வழக்குகள் வந்து கண்முன்னாடி நின்னுக்கிட்டு விடாது கருப்பாய் துரத்துது. போதா குறைக்கு அந்த கணிப்பு... இந்த கணிப்பு என எல்லா கணிப்புகளும் சில கூட்டல் கழித்தல் கணக்குகளை போட வச்சிருக்கு. ஆனாலும் கட்சிக்காரங்களை உசுப்பேற்ற சென்டிமெண்ட் அறிக்கைகளை விட்டு களப்பணியில இறக்கிவிட்டிருக்கார்.
தேர்தல்ல போட்டியிட விரும்புறவங்க விருப்ப மனுக்களை கொடுக்கலாம்னு ராயப்பேட்டையில இருக்கிற கட்சி தலைமை அலுவலகத்தில கடையை ஓப்பன் பண்ண நாள்ல இருந்து ஒரே திருவிழா கூட்டம்தான். பிப்ரவரி 6ம் தேதி விருப்பமனு கொடுக்க கடைசி நாள்... அன்னைக்கு கடைசி நிமிஷம் வரைக்கும் சீட் கேட்டு அப்ளிகேசன் போட்டுக்கிட்டே இருந்தாங்க.
கட்சிக்காரங்க பலரும் 2 அப்ளிகேசன் கொடுத்திருக்காங்க... இதில் பிரபலமானவங்க சிலரும் சத்தமில்லாம சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்காங்கலாம் காத்துவாக்குல வந்து காதுல வந்து விழுந்த தகவலை சொல்றேன் தெரிஞ்சுக்கங்க.
அதிமுகவில மட்டும்தான் யாருக்கு எந்த நேரத்தில லக் அடிக்கும்னு சொல்ல முடியாது அதனாலதான் அப்ளிகேசன் போட்டுட்டு சீட் கிடைக்கும்னு நம்பிக்கையோட காத்திட்டு இருக்காங்கலாம்.
செய்திவாசிப்பாளர்கள்
வணக்க்க்கம் புகழ் நிர்மலா பெரியசாமி... பாத்திமா பாபு என பிரபல செய்தி வாசிப்பாளர்களும் விருப்ப மனு கொடுத்திருக்காங்கலாம். இதுல வேளச்சேரிக்கு சீட் கேட்டிருக்காராம் நிர்மலா பெரியசாமி.
நடிகர், நடிகைகள்
வில்லன் நடிகர் ஆனந்தராஜ், நடிகை விந்தியா, காமெடி நடிகர் சிங்கமுத்து என பல நட்சத்திர பேச்சாளர்களும் இந்த தடவை சீட் கேட்டு அப்ளிகேசன் கொடுத்திருக்காங்கலாம்.
திருவல்லிக்கேணி ஏ.சி
அப்ளிகேசன் கொடுத்தவங்கள்ள ஆச்சரியப்பட வச்சவரு திருவல்லிக்கேணி அசிஸ்டெண்ட் கமிஷனர் பீர் முகம்மதுதான். தேர்தல்ல சீட் கேட்டு அப்ளிகேசன் போடுவதற்காகவே வேலையை விட்டுட்டாராம். இவர் சீட் கேட்டது திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதிக்காம்.
ஆடிட்டர் முதல் ஐ.டி நிறுவன எம்.டி வரை
தமிழ்நாடு, புதுச்சேரி சார்ட்டட் அக்கவுண்டன்ட் சங்கத்தலைவர் ஆடிட்டர் ஜெயராமன், திருச்சி கிழக்கு தொகுதிக்காக அப்ளிகேசன் கொடுத்திருக்கிறாராம்.
சேலம் மாவட்ட நரிக்குறவர் சங்கத்தலைவர் வெங்கடேஷ் அணைக்கட்டு தொகுதிக்கு சீட் கேட்டு மனு கொடுத்திருக்கிறாராம். அதே போல மதுரையில் ஐ.டி. நிறுவனம் நடத்தும் வி.வி.ஆர் ராஜ சத்யன் என்பவரும் அப்ளிகேசன் போட்டிருக்கிறாராம். இதேபோல
பரஞ்சோதி புகழ் ராணி
அமைச்சர் பரஞ்சோதியை மாஜி அமைச்சராக மாற்றிய பெருமைக்குறிய டாக்டர் ராணி திருச்சி மேற்கு தொகுதிக்கு சீட் கேட்டு பணம் கட்டியிருக்கிறாராம். சீட் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நேர்காணலில் அம்மாவை சந்தித்தாலே போதும் என்பது ராணியின் ஆசையாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் பார்வைக்கு
விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே அதனை கம்ப்யூட்டரில் ஏற்றி முதல்வரும் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பிட்டாங்களாம்... ஜெயலலிதாவின் பார்வை பட்டு யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதோ? என்று பக் பக் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் அப்ளிகேசன் போட்டவர்கள்.
கட்சிக்கு உழைத்தவர்களுக்கே சீட்
எம்.எல்.ஏ சீட் கேட்டு பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தாலும் கட்சிக்காக விசுவாசமாக உழைத்தவர்களுக்கும், உள்ளூரில் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களுக்கும், இதுவரை பதவியில் இருந்த போது எந்த அதிருப்திக்கும் ஆளாகாமல் இருந்தவர்களுக்குமே சீட் கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.