தமிழகத்தில் மீண்டும் புயல்.. மீண்டும் கனமழை.. வானிலை ஆய்வு மையம்
தெற்கு அந்தமான் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தெற்கு அந்தமான் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டியுள்ள வடக்கு சுமத்திரா தீவுப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
அதன்பிறகு வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலுப்பெறக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் வலு மற்றும் போக்கு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொருத்த வரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைப் பெய்யக் கூடும்.
சென்னை மாநகரைப் பொருத்த வரையில் நகரத்தின் சில பகுதிகளில் விட்டு விட்டு ஓரிரு முறை லேசான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.