அடுத்தது ஸ்டிரைட்டா செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குதான்.. காதர் மொய்தீன்
சென்னை: தமிழகத்தில் அடுத்தது திமுக ஆட்சிதான் என்று இந்திய முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை தொடங்கியது. இதில் முதன்மை பொதுச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை அளித்து பேசினார்.
இதில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் பேசுகையில், பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பேசும்போது தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் ஆவார் என்று தெரிவித்தார்.
கண்டிப்பாக முதல்வராவார் ஸ்டாலின்
தற்போது கோட்டை போல் அமைத்துள்ள விழா மேடைய பார்க்கும் போது அவர் கண்டிப்பாக முதல்வராவார் என்றே தோன்றுகிறது. இங்கு இத்தனை பேர் திரண்டதற்கு காரணம் கருணாநிதி எழுத்தாளர், வலதுசாரி, இடதுசாரி என்பதெல்லாம் இல்லை, அவர் மனிதாபிமானி என்பதற்காகதான்.
வரம்பற்ற மத்திய அரசு
மத்தியில் ஆட்சி செய்யும் அரசு வரம்பற்ற நிலையில் ஆட்சி செய்கிறது. மத்திய அரசுக்கு கடிவாளம் போட வேண்டிய கடமை தமிழகத்துக்கு உள்ளது. கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கி தமிழகத்துக்கு செய்த துரோகங்களுக்கு பரிகாரம் செய்து கொள்ளுங்கள். சிறுபான்மை முஸ்லிம்கள் திமுகவுடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டுள்ளனர். சமூக நீதியை காப்பாற்றிய மகா தலைவர் கருணாநிதி. திமுக தமிழக சட்டசபையை வெல்ல போகிறது.
நல்லாட்சி தந்த காங்கிரஸ்
10 வருடங்கள் தொடர்ச்சியாக காங்கிரஸுடன் கூட்டணி அரசு நல்லாட்சி தந்தது. கருணாநிதி மேடையில் இருந்திருந்தால் ராகுல் காந்தி செங்கோட்டை செல்வார் என வாழ்த்தியிருப்பார். நேருவின் மகளே வருக, நல்லாட்சி தருக என்று இந்திராவை கருணாநிதி அழைத்தார். அது பலித்தது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தது. அதேபோல் இந்திராவின் மருமகளே வருக என்று அன்னை சோனியா காந்தியை கருணாநிதி அழைத்தார். அதுவும் நடந்தது. மத்திய அரசு காட்டுமிராண்டிதனத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.
ராகுலுக்கு செங்கோட்டை
கருணாநிதிதான் மாநில சுயாட்சி உரிமைக்காக கமிஷன் அமைத்தார். மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும்போதுதான் இந்தியாவுக்கு பெருமை என்றவர் கருணாநிதி. மாட்டிறைச்சி, நீட் தேர்வு விவகாரங்கள், பிற்படுத்தப்பட்டோர் விவகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. எனவே மாநிலங்களின் சுயாட்சிகளை காக்க ராகுல் காந்தி செங்கோட்டைக்குச் செல்லுங்கள் என்றார் அவர்.