ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமாரை முன் மொழிந்தார் ஸ்டாலின்- திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களும் கையெழுத்து
ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமாரை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.
சென்னை: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்துப் போட்டியிடப் போகும் வேட்பாளராக மீரா குமாரை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தனது வேட்புமனுவை கடந்த 23ம் தேதி தாக்கல் செய்தார்.
தலித் வேட்பாளர்
ராம்நாத் கோவிந்த் ஆர்எஸ்எஸ்காரர் என்பதால் அவரை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் மறுத்தன. பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட தகுதியான வேட்பாளரை தெரிவு செய்யும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டன.
தலித் பெண் வேட்பாளர்
அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளராக லோக் சபாவின் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். ராம் நாத் ஒரு தலித் என்பதால் அவரைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று பாஜக வற்புறுத்திய நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை எதிர்க்கட்சிகள் களம் இறக்கியுள்ளன.
மீரா குமார் வேட்புமனுதாக்கல்
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் அதாவது 28ம் தேதி மீரா குமார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
திமுக ஆதரவு
இந்நிலையில், திமுகசெயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மீரா குமாரின் வேட்பு மனுவை முன்மொழிந்து அதில் கையெழுத்திட்டார். அதே போல் திமுக எம்எல்ஏக்கள் 22 பேரும், திமுக எம்பிக்களும் கையெழுத்திட்டனர். இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ அபுபக்கரும் அதில் கையெழுத்திட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கையெழுத்து
மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த படிவத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மாணிக் தாக்கூர் பெற்றுக் கொண்டார். அதே போல் தமிழக காங்கிரஸ் சார்பில் 7 எம்எல்ஏக்கள், மீரா குமாரின் வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளனர்.
ஆதரவு திரட்ட..
காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீராகுமார் நாடு முழுவதும் சென்று காங்கிரஸ் ஆதரவு கட்சிகளின் எம்பி மற்றும் எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் இதற்கான வேலைகளை தொடங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.