தமிழக எதிர்ப்பையும் மீறி பெயர் மாற்றம்- "நெய்வேலி" நீக்கம்... இனி 'என்எல்சி' இந்தியா லிமிடெட்!
சென்னை: தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பை மீறி "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்" என்ற பெயரை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழக மக்களின் நிலத்திலும் உழைப்பிலும் உருவான இந்த நிறுவனம் நவரத்னா தகுதி பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (Neyveli Lignite Corporation Limited) என்ற பெயரை வெறும் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என மாற்ற (NLC India Limited) தொழிலாளர்களிடம் கருத்து கேட்டது மத்திய அரசு.
நாடு முழுவதும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் இருப்பதால் "என்.எல்.சி" என பொதுப்பெயர் ஒன்றை சூட்டுகிறோம் என மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த எதிர்ப்பை மதிக்காமல் திட்டமிட்டபடி தற்போது என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் "நெய்வேலி" என்ற பெயர் இனி நிறுவனத்தில் பெயரில் இருக்காது.
இது தமிழகத்தின் பெரும் அடையாளத்தை மறைக்கும் செயல் என்றுa என்.எல்.சி. தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.