தொடரும் கூடங்குளம் அணுமின் நிலைய விபத்துக்கள்: மனித உரிமை ஆணையம் கண்டிப்பு
சென்னை: தொடரும் விபத்துக்களை தவிர்க்க தேவையான பாதுகாப்பை அதிகரிக்குமாறு கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்தை தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் அணு உலையில் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வருகின்றனர். இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை 1ல் இருக்கும் டர்பைன் கட்டிடத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது நீராவிக் குழாய் திடீரென வெடித்தது.
இந்த நீராவிக் குழாய் திடீரென வெடித்ததால் கொதிநீர் வெளியேறியது. இந்த கொதிநீர் வெளியேறிய போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் மூன்று பேர் அணு மின் நிலைய ஊழியர்கள், மூவர் ஒப்பந்த தொழிலாளிகள்.
இவர்கள் அனைவரும் முதலில் அணுமின் நிலைய வளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் வெளியானதும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி ஊழியர்களின் மருத்துவச் செலவு மற்றும் மாத ஊதியம் கிடைக்க வழிவகை செய்தது.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் அறிவித்தது. இந்த இழப்பீடு போதாது என்று தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையம், அணுஉலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 6 லட்சம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் அணுஉலைகளில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதனால் தேவையான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தி கூடங்குளம் அணுஉலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.