தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் 24 குழந்தைகள் பலி- தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
சென்னை: தருமபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் 24 பச்சிளம் குழந்தைகள் பலியானது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 குழந்தைகளும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 குழந்தைகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்தன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றன.
மொத்தமாக இதுவரை 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் டி.முருகேசன் அனுப்பி உள்ள நோட்டீஸில், ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் அவை உண்மை என்னும் பட்சத்தில் அது மிகவும் தீவிரமான மனித உரிமை மீறலாக கருதப்படும்; இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவ துறையின் முதன்மை செயலாளர், தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் 4 வாரங்களுக்குள் விரிவான ஒரு அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.