கர்நாடகாவில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன: மனித உரிமை ஆணைய உறுப்பினர் முருகேசன்
சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் முருகேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நீதிபதி முருகேசன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காவிரி நீர் பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் நடந்த வன்முறைகளில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது.
டெல்லி சென்றதும் ஆணைய தலைவர், சக உறுப்பினர் ஆகியோருடன் கலந்து பேசி, கூட்டாக ஆலோசனை நடத்துவோம். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2 மாநிலங்களில் நடந்த சம்பவம் பற்றியும் ஆய்வு செய்வோம். கர்நாடக மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு, உயிரிழப்புகள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும்.
இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் பற்றி எதுவும் கூற முடியாது. இது இரு மாநிலங்களின் பிரச்னை என்பதால் மனித உரிமைகள் ஆணையம் தான் முடிவு செய்யும்.
இவ்வாறு முருகேசன் கூறினார்.