ராமலிங்கம் படுகொலை.. முக்கிய குற்றவாளி மைதீன் அகமது சாலி எர்ணாகுளத்தில் கைது
ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
தென்காசி: ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில்முக்கிய குற்றவாளியான மைதீன் அகமது சாலி என்பவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் பிப்ரவரி 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடத்தப்பட்ட இந்த படுகொலை தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
போராட்டம்
தொடர்ந்து, இதனை கண்டித்து பொதுமக்கள் திருபுவனத்தில் கடையடைப்பும், மறியலும் நடத்தினர். அதேபோல, இந்த விவகாரத்தை கண்டித்து பாஜக, இந்துமக்கள் கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
தேசிய புலனாய்வு அமைப்பு
ஆனால் இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தது. அதனால் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை துரிதமாக ஆரம்பித்தனர்.
சோதனை
ராமலிங்கத்தின் மகன், மனைவி சித்ரா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த முகமது பாரூக் என்பவரை கைது செய்த அதிகாரிகள், அவரது வீட்டையும் சோதனை நடத்தினர்.
ஒருவர் கைது
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. திருவிடைமருதூர் அடுத்த விநாயகன் தோப்பைச் சேர்ந்த மைதீன் அகமது சாலி என்ற 51 வயது நபரைதான் எர்ணாகுளத்தில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குற்றவாளி, எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன்பின் ரிமாண்டில் சென்னைக்கு கொண்டு செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கம்
கைது செய்யப்பட்ட சாலிக்கும், ராமலிங்கத்தைக் கொன்ற கும்பலுக்கும் இடையே பெரும் நெருக்கம் இருப்பதாக என்ஐஏ சந்தேகிக்கிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகியவை நடத்திய பல்வேறு சதி ஆலோசனைக் கூட்டங்களில் சாலியும் கலந்து கொண்டதாக என்ஐஏ தெரிவிக்கிறது. அந்தக் கூட்டங்களில்தான் ராமலிங்கத்தைக் கொல்வது என்ற முடிவு எடுக்கப்பட்டதாக சொல்கிறது என்ஐஏ.