அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஒருவர் சென்னையில் கைது
அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: மதுரையில் அல்கொய்தா அடிப்படை இயக்கம் என்ற அமைப்பை நடத்திய 3 பேர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் ஒருவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மதுரையில் அல் கொய்தா அடைப்படை இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த 3 பேரை தேசிய புலனாய்வுத்துறை இன்று கைது செய்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்கள் 22 பேரை கொலை செய்ய திட்டமிருந்த கும்பல் கைது செய்யப்பட்டிருப்பதாக மதுரை போலீசார் தெரிவித்துள்ளனர்.
6 நாட்டு தூதரகங்களுக்கும் இவர்கள் மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. மேலும் பிடிபட்ட மூவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் இருவரை தேசிய புலனாய்வு முகமை மற்றும் தமிழக சிறப்பு புலனாய்வு போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை திருவான்மியூர் பகுதியில் பதுங்கி இருந்த ஒருவரை போலீசார் இன்று மாலை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் அல்கொய்தா அடிப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் பெயர் தாவூத் சுலைமான் என்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்த சுலைமைனை காவல்துறையினர், கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவன அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
கைதான நான்கு பேரும் சித்தூர், நெல்லுார், கொல்லம், மலப்புரம், மைசூர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.