தாழ்தள பேருந்து முறைகேடு?: நீரா ராடியா- டாடா- திமுக தொடர்பு குறித்து சிபிஐ விசாரணை!
சென்னை: தாழ்தள பேருந்துகளை டாடா நிறுவனத்திடம் இருந்து முந்தைய திமுக அரசு வாங்கியதில் முறைகேடு உள்ளதா? இதில் தரகர் நீரா ராடியா, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் திமுகவுக்கு என்ன தொடர்பு? என்பது குறித்து சிபிஐ முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பெரும் பரபரப்பை கிளப்பியது அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள். இதில் 14 தொலைபேசி உரையாடல்கள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய, மாநில அரசுகள் எடுத்த முடிவுகள் குறித்த விவரங்கள் தெரிய வந்தன. இதில் 8 மத்திய, மாநில அரசின் முடிவுகள் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தாழ்தள பேருந்து விவகாரம்
இந்த 8 முடிவுகளில் ஒன்றுதான் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் டாடா நிறுவனத்திடம் இருந்து தாழ்தள பேருந்துகள் வாங்கிய விவகாரமும் வருகிறது. இந்த பேருந்துகளை வாங்கும் விவகாரம் குறித்தும் நீரா ராடியாவின் டேப்பில் இடம்பெற்றுள்ளது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம்
அனைத்து பெருநகரங்களிலும், அடிப்படை வசதிகள், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
14,504 பேருந்துகள்
இதன் ஒருபகுதியாக 65 நகரங்களுக்கு 14,504 பேருந்துகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ4724 கோடியில் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் ரூ2089 கோடி மத்திய அரசின் பங்கு.
அசோக் லேலண்டு- டாடா இடையே கடும் போட்டி
இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டதில் அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ், வால்வோ நிறுவனங்களிடம் பேருந்துகள் வாங்கப்பட்டன.
தமிழகத்தில்...
இதில் தமிழகத்துக்கு 1600 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 1000 பேருந்துகள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 500 பேருந்துகளும் வால்வோ நிறுவனத்தின் 100 பேருந்துகளும் அடங்கும். இவற்றின் மதிப்பு ரூ473 கோடி.
உரையாடலில் தாழ்தள பேருதுகள்..
தற்போது ஆராயப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களில் இந்த தாழ்தள பேருந்துகளை வாங்குவது தொடர்பானவையும் உள்ளன. டாடா நிறுவனத்துக்கான பெரும்பாலான ஒப்பந்தங்களை தமது லாபி மூலமே நீரா ராடியா பெற்றுத் தந்துள்ளார். இதனால் டாடா நிறுவனத்திடம் பேருந்துகளை தமிழக அரசு வாங்கியதில் முறைகேடு ஏதும் நடந்திருக்கலாம் என்பதுதான் சந்தேகம்.
நீரா ராடியா- டாடா- திமுக தொடர்பு?
ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு, அமைச்சர் பதவி பெறுதல் போன்ற விவகாரங்களில் திமுகவின் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோருடன் நீரா ராடியா பேசிய உரையாடல்கள் வெளிவந்திருக்கின்றன. இதுபோல டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு தாழ்தள பேருந்துகளை வாங்கிய விவகாரத்தில் நீரா ராடியா மற்றும் திமுக பிரமுகர்களுக்கு உள்ள தொடர்பு என்ன? எந்த அடிப்படையில் இந்த ஒப்பந்தம் பெறப்பட்டது? இதில் எப்படியான முறைகேடு நடைபெற்றுள்ளது? பணம் ஏதும் கைமாறியுள்ளதா? என்பது குறித்து முதல் கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது.
அணி மாற்றத்தின் விளைவு?
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ்- அதிமுக இடையே கூட்டணி உருவாகலாம் என்ற சூழலில் திமுகவுக்கு இந்த விசாரணை பெரும் நெருக்கடியையே கொடுக்கும் என்று தெரிகிறது.