கேரளாவில் நிபா காய்ச்சல் பீதி... தமிழகத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை: கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் முழு கண்காணிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான காயச்சலுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு முழு பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சாலை எல்லைகளில் வாகனங்களுக்கு 'மருந்து தெளிப்பான்' அடிக்கப்படுகிறது. இதே போல் ரயில்களில் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் 86 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிபா' வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எர்ணா குளம், கோழிக்கோடு திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேப்போல எர்ணாகுளத்தில் 'நிபா' வைரஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும்.
மேலும், நிபா வைரசால் தாக்கப்படுவோருக்கு, காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், குழப்பமான மனநிலை போன்றவை ஏற்படும். சிலருக்கு நினைவு தப்பி, கோமா நிலைக்கு சென்று உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், 'நிபா' வைரஸ் காய்ச்சல் கேரளாவையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குமரி, நெல்லை, தேனி, கோவை ஆகிய 4 மாவட்ட எல்லைகளில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு உள்ளனர்.
எல்லையோர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது வேலை காரணமாக கேரளாவுக்கு தினமும் சென்று வருகிறார்கள். அவர்களில் யாருக்கும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்பதையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சுகாதாரத் துறையினர் மூலம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளனர்.