நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு… நான் விரும்பியபடியே தீர்ப்பு… மேனகா காந்தி வரவேற்பு
நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதை மேனகாகாந்தி வரவேற்றுள்ளார்.
டெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனை மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி வரவேற்றுள்ளார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஜோதிசிங் என்ற மருத்துவ மாணவி மிகக் கொடூரமாக ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி உயிரிழந்தார்.
கைது
இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவனான ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
மரண தண்டனை
அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை டெல்லி உயர்நீதிமன்றமும் கடந்த 2014-ம் ஆண்டு உறுதி செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தூக்கு உறுதி
இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றவாளிகளான 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
மேனகா வரவேற்பு
இந்தத் தீர்ப்பை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, "நான் விரும்பியபடியே இந்தத் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இதுபோன்று கொடூரமான குற்றங்களை செய்வோருக்கு ஒரு வலுவான செய்தியை தெரிவிக்க இதுபோன்ற ஒரு தீர்ப்பு அவசியமானது" என்று கூறியுள்ளார்.