நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு.. பெண்களின் பயத்தைப் போக்குமா…
நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகளான 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. மிருகத்தனமான கொடூரமான செயலைச் செய்யும் எண்ணம் உடையவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒர்
பா. கிருஷ்ணன்
சென்னை: எல்லோரும் எதிர்பார்த்தபடி தில்லியில் ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த கொடூரமான பாலியல் வன்முறைக்குப் பலியான நிர்பயா வழக்கில் நால்வருக்கும் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உலகையே உலுக்கிய அந்தச் சம்பவத்தில் இறந்த பெண்ணின் உண்மையான பெயர் வேறு என்றாலும் நிர்பயா என்றே உலகமே குறிப்பிடுகிறது.
நிர்பயா என்ற சொல்லுக்கு அச்சமில்லாதவர் என்பது பொருள்.
விறகு, வறட்டி அடுப்புகளில் சமைத்த பெண்களை நவீன முறைக்கு அழைப்பதற்காக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெண்கள் ஆபத்தின்றி, அச்சமின்றி பயன்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்புக்கு "நிர்பயா ஸ்டவ்" என்று பெயர். அதையடுத்து, ஸ்டவ்வை பயன்படுத்துவது அதிகரித்தது.
நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரம் வக்கிரத் தன்மை கொண்டது. சாதாரண குடும்பத்தில் பிறந்த நிர்பயா ஃபிஸியோதெரபி மாணவி ஆவார். தில்லியில் 2012ம் ஆண்டு டிசம்பரில் தனது நண்பருடன் ஒரு பஸ்ஸில் பயணம் செய்தபோது, பஸ்ஸில் இருந்த ஆறுபேர் கொண்ட கும்பல் நண்பனைத் தாக்கிவிட்டு, நிர்பயா மீது கொடூரமாகப் பாலியல் வன்முறை நடத்தியது. அதில் உச்சக்கட்டமாக அவளது உறுப்பில் இரும்புக் கம்பியைச் செருகி பதம் பார்த்திருக்கிறான் கும்பலில் ஒருவன். அத்துடன், அப்பெண்ணை குப்பையை வீசுவது போல ஓடும் பஸ்ஸிலிருந்து கீழே தள்ளியிருக்கிறது அந்தக் கும்பல். அவளை மீட்டு சிகிச்சை அளிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சிங்க்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவள் இறந்துவிட்டாள்.
டிரைவர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ், அக்ஷய் தாகூர், பவன், வினய் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவானது. வக்கிரம் பிடித்த அவர்களில் ஒருவன் சிறுவன் என்பது அதிர்ச்சியான தகவல். மீதி ஐந்து பேரில் ஒருவன் விசாரணையின்போதே இறந்துவிட்டான்.
நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமை உலகை உலுக்கியது ஏன்...
ஒரு பெண்ணைப் பாலியல் பயங்கரத்தால் துடிக்கத் துடிக்கச் சிதைத்ததுதான்.
உடல் இச்சைக்காக காமக் கழுகுகள் கிளியைக் கிழித்துப் போட்ட சம்பவம் அது.
உலகில் கொடுமைகளின் உச்சங்கள் இப்படிப் பெண்ணுக்கு நேரும் ஈவு இரக்கமில்லாத செயல்தான்.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெண் சுவாதியைக் கொன்றதும் இதைப் போல்தான்.
வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக சம்பவ தினத்தில் 6.30 மணிக்கு ரயிலுக்காகக் காத்திருந்த சுவாதியை அருகில் வந்த இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் சுவாதியை வெட்டியிருக்கிறான். அவளது தலை, முகம் ஆகியவற்றில் வெட்டு விழுந்தது. துடிதுடித்து அங்கேயே இறந்துவிட்டாள். கொலையாளி வெட்டியதில் அவரது பற்கள் தனியாக சிதறிக் கிடந்தன. இது தொடர்பாக ராஜ்குமார் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான். ஆனால், விசாரணை நடைபெறும்போதே, சிறையில் மின்கம்பியை கடித்து இறந்துவிட்டதாக போலீசார் கூறினர்.
இச்சம்பவத்தில் ஒரு தலைக் காதல் காரணம் என்கிறார்கள். ஆனால், சுவாதி கொல்லப்பட்ட விதம் ஈவு இரக்கமில்லாத செயல் என்பதில் இரு வேறு கருத்தில்லை.
2007-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி அஸ்ஸாமில் லக்ஷ்மி ஒராங் என்ற பழங்குடியினப் பெண் ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்தார். அவ்வளவுதான். அதற்கே நடுத்தெருவில் அவரை நிர்வாணமாக்கி,பிறப்பு உறுப்பில் கால்லால் உதைத்திருக்கிறார் ஓரு நபர். ஆனாலும், துரதிருஷஷ்டவசமாக சம்பவத்துக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் பிடிக்குள் சிக்கவில்லை.
நிர்பயா சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன் காரைக்காலில் வினோதினி என்ற பெண் மீது அமிலம் ஊற்றியிருக்கிறார் மன வக்கிரம் பிடித்த சுரேஷ்குமார் என்ற இளைஞர். சுவாதியைப் போல தன்னைக் காதலிக்கவில்லை என்ற ஆத்திரம் காரணமாக இக்கொடூரத்தை நடத்தியிருக்கிறார் அந்த நபர்.
நிர்பயா, சுவாதி சம்பவங்கள் நடந்த காலத்திலேயே ஆதம்பாக்கத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண் மீது வக்கிரம் பிடித்த இளைஞர் சிலர் திராவகம் வீசிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.சென்னை ஆதம்பாக்கத்தில் விஜயபாஸ்கர் என்ற நபர் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணை வழிமறித்து அமிலம் வீசியிருக்கிறார்.
இதுபோல் பதிவான சம்பவங்களே ஏராளம் என்றால், பதிவாகாமல் போனவை அதிகம் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு பெண் தங்க நகைகளுடன் தன்னந்தனியாகஇரவில் நடமாடும் நிலை வரும்போதுதான் இந்தியா சுதந்திரம் அடைந்தது எனக் கருதலாம் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார்.
இந்திய விடுதலைக்காக தியாகம் செய்த அவரே எது உண்மையான சுதந்திரம் என்பதை தெளிவாகக் கூறிவிட்டார்.
மாறாக, இந்தியா முரண்பாடுகளின் நாடு (India is a country of contradiction) என்று ஒரு காலத்தில் மேலை நாட்டவர்கள் கூறியதை இன்னும் நிரூபித்திக் கொண்டிருப்பது வேதனை. இந்நாட்டில் ஒரு பெண் பிரதமராக உயரலாம், சக்திவாய்ந்த அரசியல் தலைவராகத் திகழலாம். குடியரசுத் தலைவராக ஆகலாம். நாடாளுமன்றத்தின் தலைவராகவும் விளங்கலாம். ஆனால், ஆணுக்கு நேரும் கொடுமையை விட பெண்ணுக்குத்தான் சமூகத்தில் அதிக கொடுமை நேருகிறது.
2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பிறப்பதற்கு முன்பே கருவில் பெண்ணை அழிப்பது, பிறந்துவிட்டால் கள்ளிப் பாலைக் கொடுப்பது, வளரும்போது ஆணைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்று வளர்க்கப்படுவது... இப்படி நமது கலாசாரம்,இலக்கியம் எல்லாவற்றிலுமே பெண் ஆக்கப்பட்டதுதான் இந்த அவலத்துக்கு அடிப்படை.
"பெண் பிள்ளை பெறும் இயந்திரமல்ல, பெண் போகப் பொருள் அல்ல" அரை நூற்றாண்டுக்கு முன் ஈரோட்டுத் தந்தை படித்துப் படித்துச் சொன்னதை இந்த சமூகம் இன்னும் ஏற்காததே நடு சபையில் ஆண்கள் மட்டுமே இருக்கும் சபை நடுவில் ஆடை களையப்படும் பாஞ்சாலி முதல் ஓடும்பஸ்ஸில் நிர்பயா வரையிலான சம்பவங்களுக்குக் காரணம்.
தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றம் குறையும் என்று கூறப்படுவதுண்டு. மரண தண்டனை குறித்த பொதுவான பார்வை ஆய்வுக்கு உரியது என்றாலும் தெரிந்தே, மிருகத்தனமான கொடூரமான செயலைச் செய்யும் எண்ணம் உடையவர்களுக்கு இது ஒர் எச்சரிக்கையாக அமையும்.