நிர்பயா வழக்கு: சிறார் குற்றவாளி விடுதலையை கண்டித்து திருவள்ளூரில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்: டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து திருவள்ளூரில் தமிழ்நாடு பெண்கள் சுதேசி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா என்ற ஜோதி சிங், ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களில் சிறார் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனையும், மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தற்போது சிறார் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு பெண்கள் சுதேசி இயக்கம் சார்பில் அதன் நிறுவனத்தலைவர் கலைச்செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், குற்றவாளியின் வயதை காட்டி சிறார் நீதிமன்றம் குற்றவாளியை காப்பாற்ற நினைப்பதாகக் கூறி, நீதிமன்றத்தின் செயலைகண்டித்து, சிறார் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.