நிர்மலாதேவியை 5 நாட்கள் விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி
பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ள நிலையில் அவர் சாத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
சாத்தூர்: சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி எதிராக மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிர்மலா தேவியை 5 நாட்கள் விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தினார் என்பது நிர்மலா தேவி மீதான புகார். மாணவிகளை மூளைச்சலவை செய்யும் ஆடியோ வெளியாகவே, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்ததால் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக விஐபிக்களுக்கு விருந்தாக்குவதற்காக அவர் மாணவிகளிடம் பேசியதில் கவர்னர் தாத்தா இல்லை என்றும் ஒரு இடத்தில் குறிப்பிட்டார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இரு விசாரணை அமைப்புகளும் நேற்று ஒரே நாளில் விசாரணை நடத்தின.
சிபிசிஐடி சார்பில் எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் இன்று விசாரணை நடத்தினர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி தலைவர், துணைத் தலைவர், முதல்வர் உள்ளிட்டோரிடம் முதல் கட்ட விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலாதேவியை இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்த உள்ளனர். நிர்மலா தேவியை 7 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. அதனால் அது தொடர்பாக மனு அளித்துள்ளனர்.
சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆயுதப்படை காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.
வழக்கு தொடர்பான நபர்கள் தவிர வேறு யாரையும் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. போராட்டக்குழுவினர், மகளிர் அமைப்பினர் யாரேனும் நிர்மலா தேவியை தாக்க முற்படலாம் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இதனிடையே சாத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நுழைவாயிலில் நிர்மலாதேவிக்கு எதிராக மகளிர் அமைப்பினர் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சாத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிபிசிஐடி தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி அளித்துள்ளது.