நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவின் 2-ம் கட்ட விசாரணை நிறைவு
புத்தாக்க பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை: பேராசிரியர் நிர்மலாதேவி தொடர்பான 2-ம்கட்ட விசாரணையை அதிகாரி சந்தானம் நிறைவு செய்தார். இந்நிலையில் புத்தாக்க பயிற்சியில் தொடர்புடையவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் இன்றும் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை அதிகாரியான சந்தானம் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய விசாரணையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலிலேயே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலாதேவி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், முருகன், மற்றும் கருப்பசாமியிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் முன்னாள் பதிவாளர் விஜயன் மற்றும் மாணவர்களிடையேயும் நேற்று நேரில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பல்கலை புத்தாக்க பயிற்சியில் பங்கேற்றவர்களிடம் இன்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி அலுவலகத்தில் புத்தாக்க பயிற்சி அளித்த குமாரராஜன் மற்றும் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர் செல்வராஜ் ஆகியோரை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், அதன் அறிக்கையினை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.