குரல் மாதிரி சோதனை.. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் நிர்மலாதேவி
குரல் மாதிரி சோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை: குரல் மாதிரி சோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது அங்கு வந்த சில உயர் அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பணமும், இன்னும் சில உதவிகளும் செய்வதாக கூறியுள்ளனர்.
நிர்மலா இதுபற்றி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் செல்போனில் பேசியுள்ளார்.நிர்மலாதேவி பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் ஆளுநர் பெயரும் இருந்ததால் பிரச்சனை பெரிதானது.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். தமிழக அரசும் இதில் விசாரிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதே சமயம் இரண்டு நாட்களுக்கு முன்பு நிர்மலா தேவியை, சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து செல்லலாம் என்று மதுரை ஹைகோர்ட் கூறியது.
இந்த நிலையில் அவர் சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். ஆடியோவில் இருக்கும் குரல் குறித்து அவரிடம் சோதனை செய்யப்பட்டது. அவரின் குரல் மாதிரிகள் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின் அவரின் குரல் மாதிரிகளை வைத்து, ஆடியோவில் இருக்கும் குரல் மாதிரிகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. இந்த ஒப்பீட்டு பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். அதேபோல் அவர் ஆடியோவில் பேசிய நபர்கள் குறித்து விசாரிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்னை புழல் சிறையில் பேராசிரியை நிர்மலாதேவி அடைக்கப்பட்டுள்ளார். குரல் மாதிரி சோதனைக்காக அழைத்து வரப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மதுரை சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.