நிர்மலா தேவி விவகாரம்.. உதவி பேராசிரியர் முருகன் சஸ்பெண்ட்.. காமராஜர் பல்கலை. ஆட்சிமன்ற குழு அதிரடி
இன்று கூடிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் பேராசிரியர் முருகன் விவகாரம் பற்றி ஆலோசிக்கப்பட்டது. முருகனை சஸ்பெண்ட் செய்வது என அதில் முடிவு செய்யப்பட்டது.
மதுரை: மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக செல்போனில் பேசியதாக அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வீட்டு கதவை உடைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் முருகன், முன்னாள், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர்.
பின்னர் முருகன் கைது செய்யப்பட்டார். கருப்பசாமி சரணடைந்தார். பேராசிரியர் முருகன், விருதுநகரில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கிறது.
இந்த விவகாரம் குறித்து இன்று கூடிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. விசாரணை நிறைவடையும்வரை உதவி பேராசிரியர் முருகனை சஸ்பெண்ட் செய்வது என அதில் முடிவு செய்யப்பட்டது.