வளர்மதியும், சி.ஆர். சரஸ்வதியும் சரியான அரசியல் வியாதிகள்.. போட்டுத் தாக்கிய நிர்மலா பெரியசாமி
சொந்த தொகுதியைக் கூட தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தோற்றுப் போனவர் வளர்மதி என நிர்மலா பெரியசாமி விளாசியுள்ளார்.
சென்னை: சொந்த தொகுதியைக் கூட தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தோற்றுப் போனவர் வளர்மதி என நிர்மலா பெரியசாமி விளாசியுள்ளார். மேலும் அவர் எப்படி என்னை கட்சியை விட்டு வெளியே போகச் சொல்ல வளர்மதி யார் என்றும் நிர்மலா பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகலாவின் பதவி ஆசையால் அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டு பிரிவுகளாக உடைந்துள்ளது. இதில் பலர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்துள்ளனர்
இந்நிலையில் சசிகலா தரப்பு அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. சசிகலா தரப்பு அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நட்சத்திரப் பேச்சாளர்களிடையே மோதல்
அப்போது நிர்மலா பெரிசாமி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசியுள்ளார். இதற்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் சிஆர்.சரஸ்வதி, நிர்மலா பெரியசாமியை கடுமையாக திட்டியுள்ளனர். குண்டுக்கல்யாணம், சிஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். கட்சியில் இருந்து வெளியே போகுமாறும் கூறியுள்ளனர்.இதையடுத்து நிர்மலா பெரியசாமி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
போலியான அரசியல்வாதிகள்
இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைப்பேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது இன்று மாலை ஓபிஎஸ் அணியில் இணையப்போவதாக அவர் தெரிவித்தார். போலியான அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற நல்லவர்களுடன் சேரப்போவதாக அவர் கூறினார்.
சொந்த தொகுதியில் தோற்றவர்
மேலும் வளர்மதியையும் சிஆர்.சரஸ்வதியையும் அவர் வெளுத்து வாங்கினார். தன்னுடைய தொகுதியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல் சொந்த தொகுதியிலேயே தோற்றுப்போனவர் வளர்மதி என்றார்.
இவர்களெல்லாம் அரசியல்வாதியா
ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடியதைப்போல் நாட்டின் நல்லதுக்காகவும் மாணவர்கள் போராட வேண்டும் என்றும் நிர்மலா பெரியசாமி கேட்டுக்கொண்டார். பா.வளர்மதி, சிஆர்.சரஸ்வதியெல்லாம் ஒரு அரசியல்வாதியா என்றும் நிர்மலா பெரியாசாமி கேள்வி எழுப்பினார்.
அரசியலின் வியாதிகள்
இவர்கள் அரசியலின் வியாதிகள் என்றும் அவர் கூறினார். மக்கள் போலி அரசியல்வாதிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் நிர்மலா பெரியசாமி கேட்டுக்கொண்டார். அண்மையில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளரான பாத்திமா பாபு சசிகலா தரப்பு அதிமுகவில் இருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.