காங் ஆண்டபோது நீர், நிலம், ஆகாயம் அனைத்திலும் ஊழல்.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாய்ச்சல்
காங்கிரஸ் ஆட்சியில் நீர், நிலம், ஆகாயம் என அனைத்திலும் ஊழல் நடைபெற்றது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: காங்கிரஸ் ஆட்சியில் வெளிப்படையாகவே ஊழல் நடந்தது என்று சென்னையில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகார் தெரிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிவடைகிறது. இதை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். எனினும் ஆளுங்கட்சியினர் கருப்பு பணம் ஒழிக்கப்பட்ட நாளாக கொண்டாடி வருகின்றனர்.
உயர் ரக ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இதற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நிர்மலா சீதாராமன்
எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை தி.நகரில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவரவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தீவிரவாதம் குறைந்தது
கருப்பு பணத்தை மீட்க முயற்சிகள் எடுக்கப்படும் என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாகும். வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதி. ரொக்கப் பயன்பாடு அதிகளவில் இருந்தது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. பணமதிப்பிழப்பால் ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. இந்த நடவடிக்கையால் பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த பழைய நோட்டுகள் முடங்கியது.
பெரிய செலவு
இந்தியாவில் ரொக்கம் அதில் 12 சதவிகிதம் இருந்தது; தற்போது படிப்படியாக ரொக்க உபயோகத்தைக் குறைந்துக் கொள்ள வேண்டும். பெரிய செலவுகளை ரொக்கமாக மேற்கொண்டால் யாருக்கும் நல்லதல்ல. கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிப்படையாக ஊழல்
பணமதிப்பிழப்பு குறித்து மன்மோகன் சிங் பேச்சு மனவேதனையைத் தருகிறது.
அவர் பிரதமராக இருந்தபோது ஊழல் வெளிப்படையாக நடந்து கொண்டே இருந்தது. தனது ஆட்சியில் நடந்த ஊழலை மன்மோகன் சிங் கண்டும் காணாமல் இருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் நீர், நிலம், ஆகாயம் ஆகிய அனைத்திலும் ஊழல் நடைபெற்றது.
முயற்சி தொடரும்
கருப்பு பண ஒழிப்பு விவகாரத்தில் மக்களை காங்கிரஸ் குழப்புவது சரியல்ல. தங்கள் ஆட்சியின்போது கருப்பு பணத்தை ஒழிக்க முதல் அடி கூட வைக்காத காங்கிரஸ் தற்போது கிண்டல் செய்கிறது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். வருமானத்திற்கு அதிகமான பணம் குறித்து விசாரிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அரசியலுக்கு வர உரிமை உண்டு
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசு திட்டங்களிலுருந்து போலியான நபர்கள் ஆதாயம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நலனுக்காக வெளிப்படையாக பணபரிவர்த்தனை நடைபெற வேண்டும். ஜனநாயத்தில் அரசியலுக்கு வர யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு என்றார் அவர்.