ஆந்திர சாமியாரின் நிர்வாண பூஜை.. மிரண்டு ஓடிய பெண்கள்... திருவண்ணாமலையில் பரபரப்பு!
சாமியாரின் நிர்வாண யாகத்தினால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலின், தீபமாகட்டும், கிரிவலமாகட்டும், சித்தர்களாகட்டும்... அங்கு நடைபெறும் எல்லாமே சரித்திரம் படைப்பது. உலக புகழ் பெற்றது. சில சம்பவங்கள் பிரமிக்கத்தக்கது. சில சம்பவங்கள் நம்மை மிரள வைப்பவை. அந்த வரிசையில் பரபரப்பில் ஒரு சம்பவம் நடைபெற்று வருகிறது. அது என்னவென்று படியுங்கள்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் உள்ளுர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். அதுவும் கிரிவலம் நாட்களில் கேட்கவே வேண்டாம். லட்சக்கணக்கானோர் குவிந்துவிடுவர். அதிலும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி சிறப்பு மிகுந்தது.
பௌர்ணமி யாகம்
அன்றைய இரவில், பல சந்நியாசிகளும், முனிவர்களும், சித்தர்கள் என சொல்லப்படுவர்களும் யாகம் வளர்ப்பர். கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலை என்கிற பகுதியில்தான் இந்த யாகங்கள் நடைபெறும். இப்படித்தான் ஜூன் 27ம் தேதி காலையில் 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை முடிந்த பௌர்ணமி அன்றும் இரவில் யாகம் நடத்தப்பட்டது. அதில் ஒரு யாகம் திருவண்ணாமலைக்கு வந்த அனைத்து பக்தர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதிர்ச்சியில் பக்தர்கள்
கோயிலுக்கு அருகில் வனத்துறைக்கு சொந்தமான ஒரு இடத்தில் ஒரு சாமியார் அமர்ந்து யாகம் வளர்த்துக்கொண்டு இருந்தார். அவரை சுற்றி 10 பேர் மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருந்தனர். அவர்களின் மந்திர சத்தம், யாகத்திலிருந்து வந்த புகையும் அனைத்து பக்தர்களையும் திரும்பி பார்க்க செய்தது. அதனால் யாகம் நடக்கும் இடத்துக்கு அனைவரும் வந்து மண்டியிட்டு வணங்கினர். சிறிது நேரம் கழித்து புகைகளின் இடையே உற்று நோக்கியபின்னர்தான் தெரிந்தது அந்த சாமியார் நிர்வாண நிலையில் இருந்தார் என்று. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அங்கு வந்த பெண்கள் வேக வேகமாக எழுந்து போக ஆரம்பித்துவிட்டனர்.
உலக நன்மை வேண்டி
பிறகுதான் தெரிந்தது அவர் ஆந்திராவை சேர்ந்தவராம். அவரது பெயர் அட்ட யோகிஸ்வரா மவுனி திகம்பரி ஷட்டகோபி. கடந்த 25ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார். உலக நன்மைக்காக 61 நாட்கள் நிர்வாண நிலையில் இவர் யாகம் நடத்த உள்ளாராம். 61 நாட்களும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தொடர்ந்து நடத்த உள்ளார். நிர்வாண பூஜையில் ஈடுபட்டிருக்கும் நேரங்களில் இவர், யாரிடமும் பேசுவது கிடையாதாம்.
25-ந் தேதி நிறைவு
இவர் பேசி 37 வருடங்கள் ஆகிறதாம். தான் கூற நினைப்பதை ஒரு பேப்பரில் மட்டும் எழுதி காட்டுவாராம். இந்த யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாமியார் உலக நன்மைக்காக நிர்வாண யாகம் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் காவல்துறைக்கு தெரியுமா? தெரியாதா? அனுமதி பெற்றுதான் நிர்வாண யாகம் நடைபெறுகிறதா, 61 நாட்களுக்கு பின் உலக அமைதி கிடைத்துவிடுமா .. அந்த அண்ணாமலையாருக்கே வெளிச்சம்!