ராப்.. ராக்கை தூக்கி போடுங்க.. நித்தியானந்தாவின் இந்த பாட்டை கேளுங்க!
இணையத்தில் நித்யானந்தாவின் பாடல் வைரலாகி வருகிறது.
சென்னை: பேட்ட ராப்... ராக் மியூசிக்... சூப்பர் ஹீரோக்களின் மாஸ் எண்டரி சாங்.. என எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது ஒரு பாடல்! அது நம்ம நித்தியானந்தா பற்றின பாடல்தான்!
இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. உள்ளே சென்று பார்த்தால், நித்யானந்தா கம்பீரமான தோற்றத்துடன், ஒற்றை ஆளாக நின்று கொண்டிருக்கிறார். முகத்தில் அதே ட்ரேட் மார்க் சிரிப்பு! பாட்டு ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரு புதுசு - ஒரு தினுசு
யார் சொன்னார்கள் பக்தி பாடல்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று! ஸ்லோகங்கள், மந்திரங்கள் என தெய்வ தரிசனத்துடன் கூடிய பஜனை பாடல்களை கேட்ட நமக்கு நித்யானந்தா பாடல் புதுசாக மட்டும் இல்லை.. ஒரு தினுசாகவே உள்ளது.
ட்ரேட் மார்க் சிரிப்பு
இந்த பாடலை எதில் சேர்த்து கொள்வது என்றே தெரியவில்லை. ஆங்கில பாடல் நெடியில் தமிழ் வார்த்தைகளும், ஆங்கில வார்த்தைகளும் வந்து விழுகிறது. விழும் அத்தனை வார்த்தைகளிலும் நித்யானந்தா புகழே! பக்தர்கள்... சாரி... சாரி... பக்தைகள் இந்த பாடலை பாட பாட, நித்யானந்தா சிரித்தமேனிக்கு நின்று கொண்டே இருக்கிறார். பாடல் முடியும்வரை ஒரே போஸ்தான்!!
தாறுமாறாக ஓடுகிறது
சாமியார் நித்யானந்தாவின் இந்த வீடியோ பாடலில் சும்மா கிராபிக்ஸ் பூந்து விளையாடியிருக்கு. திடீர் திடீரென்று அவரது கையை ஆசி வழங்குவதுபோல மேலே தூக்குகிறார். அப்போது கையிலிருந்து புகை வெளியேறுகிறது. இந்த உலகையே ஆளக்கூடியவர் என்ற வரிகள் வருகிறது. அதற்கு நித்யானந்தாவுக்கு பின்னால் பூமி சுழல்கிறது, நிலங்கள் தாறுமாறாக ஓடுகின்றன!!
கண்ணை திறந்து மூடுகிறார்
அதற்கு மேல் படுவேகமாக இருக்கிறது பாட்டு. அவ்வப்போது திடீர் திடீரென கண்ணை திறந்து திறந்து மூடுகிறார் நித்யா. ஆனால் அது ஏன் என்றுதான் தெரியவில்லை. காடுகள், மலைகள் என்று தவமிருந்த நம் யோகிகள், முனிவர்களுக்கு நடுவில் டிஜிட்டல் சாமியார் நித்யாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது!