மதுரை ஆதீனத்திற்குள் நுழைய முயன்றால் கடும் நடவடிக்கை.. நித்தியானந்தாவுக்கு வக்கீல் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: மதுரை ஆதீனத்திற்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு ஏற்கனவே தடை உள்ளது. அவர் அதை மீறி நுழைய முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தாவை கடந்த 2012ம் ஆண்டு தற்போதைய ஆதீனம் நியமித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நித்தியானந்தாவும் தனது சிஷ்யர்களோடு ஆதீனத்திற்குள் நுழைந்தார். இதனால் மதுரையே அல்லோகல்லப்பட்டது.
இந்த நிலையில் இந்த நியமனத்தை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேபோல ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதனால் மதுரை பக்கம் வர முடியாமல் இருந்தார் நித்தியானந்தா.
இந்த நிலையில் மதுரை செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் நித்தியானந்தா. அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் கூறுகையில் நேற்றைய தினம், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக நித்தியானந்தா தொடரலாம் என்பது போல தீர்ப்பு வெளியானதாக தவறான தகவல் பரப்பி வருகின்றனர். அதில் உண்மை இல்லை. அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
அவர் குற்றப் பின்னணி கொண்டவர். அவர் மடத்துக்குள் வரஉயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எக்காலத்திலும் அவர் வர முடியாது. அப்படி வந்தால் கடுமையான நடவடிக்கையை எடுப்போம் என்று கூறினார் ஜெயச்சந்திரன்.