பல்லாவரம் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பில் நித்தியானந்தா சீடர்கள் அடாவடி!
நித்யானந்தா சீடர்கள், புறம்போக்கு நிலத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் மக்களை காலி செய்ய சொல்லி, மிரட்டி அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை பல்லாவரம் மலைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 45 ஆண்டுகளாக குடியிருக்கும் 17 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை காலி செய்யச் சொல்லி நித்யானந்தாவின் சீடர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லாவரம் 11ஆவது வார்டு பச்சையம்மன் கோயில் தெருவில் அரசு மலைப் புறம்போக்கு இடம் உள்ளது. இதில் கடந்த 45 ஆண்டுகளாக 17 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் ராமநாதன் என்பவர் இந்த இடம் என்னுடையது என கூறி தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்ந்நிலையில், இருதரப்புக்கும் இடையே பல்லாவரம் தாசில்தார் கௌசல்யா அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராமநாதன் தரப்பில் அவரது மகள் வள்ளி கலந்துகொண்டுள்ளார். அவர் நித்தியானந்தாவின் சீடர்கள் என கூறி நான்குபேரை அழைத்து வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இதுகுறித்து தாசில்தார் கௌசல்யா கூறுகையில், இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் செல்வோம். இரு தரப்பினரிடமும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டுள்ளோம்.மேலும் குடியிருப்பு சான்று ஆவணங்களையும் கேட்டுள்ளோம். அந்த சான்றுகள் கிடைத்தவுடன் அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து அவரின் முன்னிலையில், இதற்கு தீர்வு காணப்படும்.
அதுவரை இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என கூறினார். அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் 45 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை காலி செய்யச் சொல்லி நித்யானந்தாவின் சீடர்கள் மிரட்டுகிறார்கள். எங்கள் பகுதியில் அவர்கள் வந்து குடிசை போட்டு தகராறில் ஈடுபடுகிறார்கள். மேலும் நித்யானந்தா சீடர்கள் போட்டுள்ள குடிசைகளுக்கு சட்டவிரோதமாக மின் இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது என புகார் கூறினார்கள்.