அத்துமீறல்களின் மறு பெயர் தான் நித்தியானந்தா சீடர்களா?
நித்தியானந்தா சீடர்கள் என்று சொல்லிக் கொண்டு தனி சர்வாதிகாரம் நடத்துபவர்களுக்கு நீதிமன்றம் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை : நித்தியானந்தா சீடர்கள் என்று சொல்லிக் கொண்டு அடக்குமுறைகள், அத்துமீறல்கள் என்று தனி சர்வாதிகாரத்தில் ஈடுபடுவதன் உச்சமாக உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியின் உத்தரவுகளை உடனுக்குடன் வாட்ஸ் அப்பில் அனுப்பி வசமாக சிக்கியுள்ளார் நித்தியானந்தா சீடர் ஒருவர்.
நித்தியானந்தா எப்படி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவரோ அதே போன்று அவரது சீடர்களும் அத்துமீறல்களுக்கு பஞ்சமில்லாதவர்கள். நித்தியானந்தா ஆசிரமத்திற்குள் சர்வாதிகாரிகளைப் போலத் தான் இவர்கள் நடந்து கொள்வார்கள். ஆசிரமத்திற்குள் மட்டுமல்ல நித்தியானந்தா தரப்பு வளைத்து போட நினைக்கும் இடங்களுக்கும் இந்த சீடர் படை தான் முதலில் சென்று பொதுமக்களிடையே பிரச்னையை ஏற்படுத்தும்.
சென்னை பல்லாவரத்தில் பொதுமக்கள் 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுவழிச்சாலையை மூடி நித்தியானந்தா ஆசிரமம் அமைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள பெண்களை நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர வற்புறுத்திய சீடர்கள் பெண்களை கேலி செய்ததாக குற்றம்சாட்டி அந்தப் பகுதி மக்கள் ஆசிரமத்திற்கு சொந்தமான வேன், கார்களை அடித்து நொறுக்கினர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டது.
சீடர்கள் செய்யும் ஆக்கிரமிப்புகள்
இதே போன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மலையை ஆக்கிரமித்து ஆசிரமம் அமைக்க நித்தியானந்தா சீடர்கள் முயற்சித்தனர். நித்தியானந்தா அங்குள்ள பாறை ஒன்றின் மீது தான் தியானம் செய்வார் என்று கூறி அந்த இடத்தில் ஆசிரமம் அமைக்க முயன்றனர். மாவட்ட நிர்வாகம் எச்சரித்தும் நித்தியானந்தா சீடர்கள் அங்கிருந்து கிளம்பாமல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எச்சரித்தும் பூஜை செய்து தந்திரமாக ஆசிரமம் அமைத்த நித்தியானந்தா சீடர்கள் மீது பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து நித்தியானந்தா சீடர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆசிரமம் அமைக்க ஆக்கிரமிப்புகள் செய்ய சீடர்களை அனுப்புவது நித்தியானந்தாவின் டெக்னிக்.
அத்துமீறல்களுக்கு அளவில்லை
மக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் வகையில் நித்தியானந்தா தான் எல்லாமே என்கிற ரீதியில் அவர்களின் சீடர்கள் செய்யும் அலப்பறைகள் சொல்லி மாளாதவை. இதே போன்று அண்மையில் ஆண்டாள் சர்ச்சையில் ஆண்டாள் பெயர் கலங்கப்பட்டு விட்டது என்று கூறி பெண் சீடர்களை வைத்து ஆபாச வசவுளை அள்ளி வீசினார்கள்.
ஆபாச வசை பாடிய பெண்கள்
இதே போன்று வெளிநாட்டில் இருந்தும் நித்தியானந்தா சீடர்களை வைத்து ஆபாச வார்த்தைகளை எழுதிக் கொடுத்தது தான் கொடுமையின் உச்சம். கடவுள் வழிபாடு என்பது நல்ல சிந்தனைகள் மற்றும் மக்கள் நலனுக்காகவும், நல்வழிப் படுத்தும் சிந்தனைகளை வளர்ப்பவையாகவும் இருக்கும், ஆனால் இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்பது போலத் தான் தொடர்ந்து செயல்படுகிறார்கள் நித்தியானந்தா சீடர்கள்.
நீதிமன்றத்திலுமா சர்வாதிகாரம் செய்வது
இது மட்டுமல்ல பொதுவெளிகளில் தான் இப்படி என்றால் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா தொடர்பான வழக்கு விசாரணையிலும் இந்த சர்வாதிகாரம் நீண்டிருக்கிறது. நீதிமன்றத்திற்குள் யாருமே செல்போன் பயன்படுத்தக் கூடாது. பத்திரிக்கையாளர்களை செய்தி கொடுப்பது என்றால் கூட நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்து தான் தகவலை அவர்களின் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
நித்தி சீடரின் விதிமீறல்
ஆனால் பெங்களூரு மடத்தில் இருந்து வந்திருந்த நரேந்திரன் என்ற நித்தியானந்தாவின் சீடர் வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் இருந்தபடியே வாட்ஸ் அப்பில் அப்டேட் செய்துள்ளார். இதனைக்கண்டு ஆத்திரமடைந்த நீதிபதி அவரைக் கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து, நரேந்திரனை மத்திய பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்து பதிவாளர் முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.
விசாரணை
நரேந்திரன் வாட்ஸ் அப்பில் யாருக்குத் தகவல் அனுப்பினார் என்ற விவரங்கள் அவருடைய செல்போனை வைத்து கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. நீதிமன்றம் நித்தியானந்தா சீடருக்கு இன்று அளிக்கும் தண்டனையானது பல்வேறு இடங்களில் அவர்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு தக்க பாடமாக அமைய வேண்டும்.